வெள்ளி, மார்ச் 25, 2016

‘பியார் கி புல்புல்’

நேற்று முன்மாலைப் பொழுது இந்த அறைக்குள் வந்தபோதே ஜன்னல்வழியே கடல் என் கண்களை நீலமாய் நிறைந்தது. எப்போது மும்பைக்கு வந்தாலும் இதே பழைய ஓட்டலில் தான் நான் தங்குவது. அறைகூட இதுவாய்த்தான் இருக்கும்.காரை உதிர்ந்து இருட்டடித்துப் போன அறை. அறையிலிருந்து பார்க்கும்போது எதிரே விரிந்த கடலுக்கும் ஓட்டலுக்கும் இடையே ஓரிரு பெரிய கட்டிடங்களும் ஊடே ஓடு சார்ப்பு வைத்த வீடுகளும்,பிளாஸ்டிக் ஷீட் மூடிய குடிசைகளுமாய் கலந்து காட்சியளித்தன.

இன்று சொல்லியிருந்தபடி காலை ஒன்பதுமணிக்கு சந்திக்க அலோக் வரவில்லை. மணி பத்தாகிவிட்டது . வெளியே ஒரே சீராக பெய்து கொண்டிருக்கும் மழையையே பார்த்துக் கொண்டிருக்கிறேன். மரங்கள்கூட எந்த ஆட்டமுமின்றி கட்டிடங்களோடு பேசிவைத்ததுபோல் மௌனமாய் மழையின் மூர்க்கத்தில் சமைந்து கிடந்தன. அந்த மழையின் தாக்குதல் அவற்றுக்கு மிக வேண்டியிருக்கிறதோ என்னவோ? மூச்சுவிடாமல் முத்தமழை பொழியும் கணவனை மறுக்காமல், மௌனமாய் கண்மூடி ஏற்றுக்கொள்ளும் அல்லது சகித்துக்கொள்ளும் புதுமனைவியைப் போல அந்த மழை..... மழையோ மரங்களோ கட்டிடங்களோ புதியவை அல்ல. எனினும் அந்த முயக்கம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் கணவர்களோ தங்கள் பழைய மனைவிமார்களுக்கு இன்னமும் முத்தம் கொடுக்கிறார்களா என்று தெரியாது. ஏனெனில் எனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை.

என்னடா இவன் வர்ணனையும பேச்சும் எழுத்தாளனைப்போல இருக்கிறதே என்று யோசிக்கிறீர்கள் தானே? நான் வாசு. வாசுதேவ சர்மா. புகழ்வாயந்த எழுத்தாளனாய் இருக்க வேண்டியவன். எல்லாம் உங்களால்தான் ! எழுத்தாளன் தான் எழுதுகிறானே,அவனுக்கு யார் சோறு போடுவது என்று யோசித்தீர்களா? குட்டிச்சுவராய் போய்விட்ட இந்த சமுதாயத்தில், எழுத்தாளனைப் போஷிக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வு இருக்கிறதா? அட உங்களை விடுங்கள். ஒன்பதுமாதம் சுமந்து பெற்ற அம்மாவே சோறுபோட மறுத்துவிட்டாளே.... ‘வெட்டியாய் உட்கார்ந்து கிறுக்கிகிட்டு கிடக்காம, படிச்ச படிப்புக்கு ஒரு வேலைக்குப்போகிற வழியைப் பாரு!’ என்று கராறாக அல்லவா சொல்லி விட்டாள்? எதிர்வீட்டு ரேவதிக்கு நான் எழுதிய கவிதை பிடிக்கவில்லை. போகட்டும். அவளைப் பெற்ற அப்பனுக்கு அந்தக் கவிதை ரொம்பவே பிடிக்காமல் போய்விட்டது. ஆள்,படை,அம்புன்னு ஆர்ப்பாட்டமான ஆள். இரவோடுஇரவாக நான் மட்டும்  மாயவரத்திலிருந்து இடம்மாற வேண்டி வந்தது.

சிங்கார சென்னை என்னை அரவணைத்துக் கொண்டது. அங்குஇங்கு எனத் திரிந்து கோடம்பாக்கம் எனும் சொப்பனபுரிக்குள் நுழைந்துவிட்டேன். திரையில் காணவேண்டிய முகமாய் இருந்திருந்தால்தான் ரேவதிக்கு என் கவிதை பிடித்திருந்திருக்குமே! என் ஜோலி திரைக்குப் பின்னால்தான். பின்னாலிருக்கும் பெரும்உழைப்பு யாருக்கு இங்கே தெரிகிறது? கட்டியிழுக்கும் அந்த பெரும் சங்கிலியில், ஒரு கண்ணி சரியில்லை என்றாலும் தேர் நகருமா? அந்த சங்கிலியின் சிலகண்ணிகள் இப்போது எனக்கு அத்துப்படி. அவற்றில் சுழலும் அல்லது உழலும் முகம் தெரியாத பல நூறு பேர்களில் நானும் ஒருவன். கெட்டிக்காரன் என்று பேரெனக்கு. கிளாப் அடிப்பதிலிருந்து வசனம் சொல்லிகொடுக்கிற வரைக்கும்,எல்லாமுமே செய்வேன். சின்னசின்ன பேனர்களில் தான் வாய்ப்பு இதுவரை.... இப்போதுகூட ஒரு சின்ன பட்ஜெட் படமொன்றுக்கு லொகேஷன் பார்க்கத்தான் மும்பை வந்திருக்கிறேன். என்னைமாதிரி பாலிவுட்டில் ஒரு புரொடக்‌ஷன் அசிஸ்டெண்ட்டுதான் அலோக். அவனுக்காக காத்திருக்கும் இந்த கேப்பில் தான் உங்களோடு அளவளாவியாகிறது.

இவனை இன்னும் காணோம். மழைவேறு. நான் சம்பந்தப்பட்ட இந்த திரைக்கதைப்படி, கதாநாயகி மும்பையில் வேலைக்கு சேர வருகிறாள். அவளை வழிமறித்து ரௌடிகள் துரத்துகிறார்கள். அவள் தெருக்களில் நுழைந்து ஓடுகிறாள். யாரும் தட்டிகேட்க முடியாத கெட்டபையர்கள். கேட்க நிற்கிறான் ஒருவன். அவன் கையை வெட்டுகிறார்கள். ஆனால் அவளும் எப்படியோ தப்பிக்கிறாள். தனக்காக வெட்டுபட்ட வாலிபனை கண்டுபிடித்து உதவ நினைக்கிறாள். அந்தத் தேடலில் தமிழகம் வருகிறாள்.

அதுவரைத்தான் கதை தீர்மானமாகி இருக்கிறது. மேற்கொண்டு மூன்று வேறுவேறு கதைத்தொடர்ச்சிகள் டிஸ்கஷனில் இருக்கிறது. அந்த மூன்றிலும், ஒன்று ரொம்ப சுமாரான கதையோட்டம். பிரச்னை என்னவென்றால்,அதை ஓட்டியவர் படத்தின் தயாரிப்பாளர். அவரே ஒரு எழுத்தாளராம். இத்துப்போன பத்திரிகை ஒன்றில் ‘செத்துப்போச்சு காதல்’ என ஒரு சிறுகதை வெளியாகி இருக்கிறதாம். ஜெயிக்கிற கட்சியோடு இருந்துவிடலாமே என்று தயாரிப்பாளர் முடிவுக்கு சபாஷ் போட்ட என்னை யாருமே ரசிக்கவில்லை. யார் ரசித்து என்னாகப் போகிறது? பழைய வசனகர்த்தா முறுக்கிக் கொண்டு போனால் அடுத்த வசனகர்த்தா நானே தான். பெரிய பிரேக்.....

இப்போதைய பிரச்னை என்னவென்றால் எனக்கு தரப்பட்டிருக்கிற பணம் மூன்று நாளைக்குத்தான் காணும். அதற்குள் லொகேஷன் போய்வர பயணச்செலவு, தின்னும் பிரியாணி, பருகும் பீர் ,மெல்லும் பீடா, ஊதும் சிகரெட் என செலவையெல்லாம் முடித்துக்கொள்ள வேண்டும். அதான் சொன்னேனே பட்ஜெட் சின்னதாக என்று....அலோக் படவாவை இன்னும் காணவில்லை. என் தயாரிப்பாளருக்கு எங்கேயோ அறிமுகமான ஹிந்தி டைரக்டர் ஒருவரின் உதவியாளனாய் இருந்தவன்தான் இந்த அலோக். திருவாழத்தான்.....

ஒரு வழியாக மாலை மூன்றுமணிக்கு அலோக் வந்தான். கொஞ்சம் அதிகமாகவே திட்டிவிட்டேன். ‘மாஃப் கர்னா மாஃப் கர்னா’ என்று கெஞ்சித் தள்ளிவிட்டான். ஆட்சேபணை இல்லையென்றால், அவன் வீட்டில் மாடி ரூமிலேயே தங்கிச் கொள்ளவும் சொன்னான். நமக்கும் காசு கட்டிவருமே என்று சின்ன பிகுவுக்குப்பின் அவன் அழைப்பை ஏற்று அவன் வீட்டுக்கு சென்றேன் . அவன் மாடி என்று சொன்னது தரையிலிருந்து எட்டு கள்ளிப்பலகை படிக்கட்டுகளுக்கு மேல் நாலுக்குஆறு விஸ்தீரணத்திலான ஒரு கள்ளிப்பலகை தளத்தைத்தான். அதிலிருந்து நாலடி உயரத்தில் முட்டும் மேற்கூரை. அதில் ஊர்ந்துதான் சென்று படுக்க வேண்டும். அபத்திரமாய் அந்தரத்தில் சின்னதாய் ஒரு கருப்பு 'மின்னி' ஃபேன் வேறு!அலோக்குடன் கூடவே வீட்டில் வசிப்பது படுத்தபடுக்கையாய் அவன் அம்மா, பருவச் சிட்டுபோல் ஒரு தங்கை மற்றும் ஒரு நாட்டு நாய்.

மறுநாள் லொகேஷன் பார்க்கப் போகும்போது என் கையைப் பிடித்துக்கொண்டு அலோக் ஒரு உதவியைக் கேட்டான். கொஞ்சம் சிக்கலான உதவிதான். அவன் அம்மாவுக்கு கான்சர் என்றும், எப்போது வேண்டுமானாலும் இறந்து விடுவாளென்றும், தங்கைக்கு மணமாகவில்லையே என்ற குறையில் அவள் மருகிக் கொண்டிருப்பதாயும் சொன்னான். நான் என்ன செய்யவேண்டும் எனக் கேட்டேன். அடுத்தநாள் அம்மாவை ஆஸ்பத்திரியில் சேர்க்கப்போவதாயும், அவளிடம் அவன் தங்கையை நான் பெண்பார்க்க வந்திருப்பதாய் பொய் சொல்லியிருப்பதாகவும் சொன்னான். அன்று அம்மாவிடம் அவன் தங்கையைப் பிடித்திருப்பதாயும் கல்யாணம் செய்து கொள்வதாயும் மட்டும் சொல்லிவிட சொன்னான். தன் அம்மாவின் இறுதி கணம் அந்த சந்தோஷத்திலேயே முடியட்டும் என்று கண்ணீர்மல்க கைகூப்பினான். அந்த உதவியை அவன் ஆயுளுக்கும் மறக்கமாட்டான் என்றும் மூக்கை சிந்தினான்.

எனக்கு ரொம்ப தர்மசங்கடமாய்ப் போய் விட்டது. செத்துப் போகிறவளிடம் பொய் சொல்லலாமா? பேயாய் வந்து சிண்டை உலுக்கிவிட மாட்டாளோ? என்று பயமாய் இருந்தது. நாலாவது புளோரில் படப்பிடிப்பு நடக்கும் தெலுங்குக்கதை இப்படித்தான் போகிறது. அதன் உதவிஇயக்குனர் ராகவராவ் அவனுக்கு அந்தக்கதையை சொல்லியிருக்கிறான். தெலுங்கு படப்பிடிப்பில் எனக்கு என்ன வேலை என்கிறீர்களா? அவர்கள் போடும் உப்புமா நெய்வாசத்துடன் நன்றாய் இருக்கும். தொட்டுக் கொள்ள கோங்குரா சட்னி வேறு. எங்க உப்புமாவிலே எங்க பட்ஜெட்டே ஸ்வச்சமாய் தெரியும்!

இருக்கிற இருப்பில் கல்யாணம்கார்த்தின்னு நினைப்புக்குகூட வருவதில்லை எனக்கு. இந்த ஃபீல்டுக்கு வந்தபுதிதில் ஒரே கனவுகனவாக இருந்தது. என் திறமையைப் பார்த்து ஒரு ‘ம’நடிகை என்னைக் காதலிப்பதாகவும், திருப்பதியில் கல்யாணம் செய்து கொள்வதாயும் ஒருநாள் கனவு வந்தது. அடுத்த நாளிலிருந்து அந்தக் கனவை ரீவைண்ட் செய்தபடி தூங்கிப்போவேன்.. மேக்கப் போட்டுக்கொண்டிருந்த ‘ம’வை தற்செயலாகப் பார்த்தபிறகுதான் அந்த மயக்கம் தெளிந்ததுன்னு வச்சிக்குங்களேன்.

ஆனா இப்போதைய சீன்ல, என்னையும் ஒரு ஆளா மதிச்சு கல்யாணத்துக்கு நடிக்கிறமாதிரி ஒருத்தன் கூப்பிட்டாலும், பொய்சொல்ல மனசு கேட்கவில்லை. ஆனாலும் ஆலோக்கின் கண்ணீர் என்னை கரைத்துவிட்டது. ஒத்துக் கொண்டேன்.

மறுநாள் ஸ்பாட்டுக்கு கிளம்புமுன், அம்மாக்காரியின் படுக்கைக்கருகில் நின்றேன். கொஞ்சம் நிற்கமுடியாமல் தான் நின்றேன். இலுப்பை பூத்த வாசனை, யூகலிப்டஸ் தைலம், புளித்த பால் என எல்லா வாசனையும் கலந்து ஒரு வீச்சம்.
“ஆவோ பேட்டா’’ என்றாள்.
“நமஸ்தே மா! மே ஆப்கி பேடி கோ சாதி கர்ணா சாத்தா ஹூங்!”

மனசுக்குள் அமிதாபச்சன் வாய்ஸ் போல் நினைத்தபடி தான் சொன்னேன். அது கொஞ்சம் சுருளிராஜன் குரலில் வெளிப்பட்டுவிட்டதோ எனும் ஐயம். ச்சே! இருக்காது.

“அச்சா பேட்டா! பகுத் அச்சா!” என்று அந்தம்மா துள்ளியெழுந்து படுக்கையில் உட்கார்ந்து என் தோள்களைப் பற்றியிழுத்து என் உச்சி முகர்ந்தாள். இந்தக் கிழவி பிழைத்துக் கிடந்தால் ஒரு புது நைட்டி வாங்கித் தரவேண்டும். அய்யய்யோ...இவள் பொழைச்சால் நான் செத்துடுவேனே.. என்ற பயமும் ஓடியது. ஆலோக் என் கைகளைப் பற்றி இழுத்து வாசலுக்கு வந்தான். “நன்றி வாசு! என் அம்மா படுக்கையை விட்டு எழுந்துஉட்கார்ந்து ஆறு மாசமாகிறது. உன் ஒரு வாக்கியத்தில் அந்த மாயம் நிகழ்ந்து விட்டது. இனி பிழைத்து விடுவாள் என்ற நம்பிக்கை வந்து விட்டது” என்றான்.

'அம்மா...பிழைச்சு... பிராமிஸ்... கல்யாணம்...’ என்ற என் குழறலைக் கேட்க அவன் அங்கிருந்தால் தானே?

உள்ளேயிருந்து வந்த ‘ஸ்னேகல்’ என்னைப் பார்த்தநிமிஷம் பட்டவெட்கம் இன்னமும் என்னைப் பதற அடித்தது.

ஸ்பாட்டுக்கு கிளம்பினோம்.. அலோக் காலையில் அந்த சீனே நடக்காதது போல், நான் வந்த வேலையிலேயே ஈடுபாட்டோடு உதவியாக இருந்தான். நாளெல்லாம் சுற்றி லொகேஷன் பார்க்கும் வேலை முடிந்தது. படபிடிப்புக்கு அவன் உதவி செய்வதாக சொன்னான். என் நட்புக்கு நன்றி சொல்லி விடைகொடுத்தான்.

நான் மீண்டும் ‘உன் அம்மா...பிழைச்சு... பிராமிஸ்... கல்யாணம்...’ என்ற பல்லவியை ஆரம்பித்தேன். ‘’அதையெல்லாம் விடு. நீ செய்த உதவியை ஆயுசுக்கும் மறக்க மாட்டேன்’’ என்றான். இருவரும் எங்கள் விலாசங்களையும் பரிமாறிக் கொண்டோம்.

சென்னை மீண்டும் என்னை உஷ்ணத்துடன் இறுக்கிக்கொண்டது. தற்போதைய படவேலையில் கொஞ்சம் சுணக்கம் இருந்ததால், புதிதாய் பர்வதவர்தினி ப்ரொடக்ஷன்ஸ் ப்ராஜெக்ட்டில் என்னை அழைத்ததால் அந்த வேலையில் ஈடுபட்டிருந்தேன். இது கொஞ்சம் பெரிய பேனர். ஏதோ ஒரு மடம்.. எதானாலென்ன?! வேலையில் மும்முரமாய் இருந்தாலும், எனக்கு மும்பை சம்பவம் நினைவுக்கு வந்தபடி இருந்தது. 

ஸ்னேகலை நினைவுக்கு கொண்டுவர முயற்சித்தேன். அவள் கணுக்கால் வரை வீட்டுவேலையில் ஈரமான பச்சைக்கலர் சல்வார் சராய் நினைவுக்கு வருகிறது. சாயம் இழந்து வரும் பர்ப்பிள் கமீஸ் நினைவுக்கு வருகிறது. இடது தாடையில் பிறைநிலா போன்ற சிறிய தழும்பு நினைவுக்கு வருகிறது. நீளமான தலைமுடி நினைவுக்கு வருகிறது. சிவப்புக்கம்மல் போட்ட காதும், கருப்புமணி செயினும், ஹிந்தி நடிகை மும்தாஜ் போன்று கொஞ்சம் வானம் பார்க்கும் மூக்கும், லேசாக முடிபரவிய கன்ன ஓரங்களும், அந்தக் கீழ்வரிசை தெத்துப்பல்லும் சிவந்த பாதங்களும் தனித்தனியாய் நினைவுக்கு வருகின்றன. ஆனால் அவளே ஒருசேர முழுசா நினைவுக்கு வரலையே.. அது என்ன பாட்டு?? “ஆசை முகம் மறந்து போச்சே... இதை யாரிடம் சொல்வேனடி தோழி”. அதான்.. அதான்... அது மாதிரி தான்..

அய்யய்யோ.. என்ன இது? இவ்வளவு விவரமாக அவளைப் பார்த்துத் தொலைத்திருக்கிறேன்?? என் மனசு எனக்கே தெரியாமப் போச்சே.. இருந்தாலும் அலோக் வீட்டு நிலைமை என்ன.. என்னோட... இருங்க.. இருங்க... எனக்கும் அப்படி என்ன பெரிய நிலைமை? பாட்டி சொல்லுவாளே பஞ்சபக்ஷ பரமான்னம்... அதா தட்டுகெட்டுப் போகிறது ? இருந்தா கிசான் ஜாம், இல்லன்னா வெல்லம்னு பிரட்டோட பிரட்டித் தின்கிற பவிஷுக்கு... எல்லாம் போதும்... என்ன? போதுமா?? முடிவே பண்ணிட்டேனா?? அப்படி மும்பை போனா அலோக் வீட்டில் தங்குற வசதியாவது இருக்கா?

‘என்ன பெரிய வசதி? கள்ளிப்பலகை மாடித்தலத்தில் தான் முதலிரவு வச்சுக்கணுமா? ஐயையோ என்ன இது முதலிரவு அதுஇதுன்னு பேத்தறேன்... முடிவே பண்ணிட்டேனா?
மெள்ளமா கூப்பிட்டு பார்க்கிறேன்...’ஸ்னேகல்... ஸ்னேகல்...’ நல்லாதாண்டி இருக்கு உன்பேரு...செல்லமா பேரை எப்படி சுருக்கி கூப்பிடலாம்? ‘ஸ்னேக்’.. சீ! ஸ்னேக்குன்னா பாம்பாச்சே... அவ பச்சைக் கிளின்னா...’ஸ்னோ’ ஓக்கேவா? அது ‘பனி’ன்னா .. பேரு சில்லுண்டிருக்கே! ஆஹா!

திடீர்ன்னு எல்லாம் பளிச்சின்னு தெரியுது எல்லா ஜன்னலையும் திறந்தாப்புல......என் குதூகுலத்துக்கு இப்போ  வந்த அன்னக்கிளில மியூசிக் போட்டாரே.. பேரு என்ன? ஹாங்... இளையராஜா... ஆமாம், அவரைத்தான் ஒரு பாஸ்ட் சாங் போட சொல்லணும்.. வார்த்தைகள் எதுக்கு? எல்லா இன்ச்ட்ரூமெண்ட்டையும் அதிரவச்சு... ஒரு லாங் நோட்டா ப்ளூட்டை இழையவிட்டு... வேணும்னா லோ கீலே விசில்... அவருக்கு தெரியாதா? ராஜா எல்லாம் பார்த்துக்குவார்.
இன்னைக்கு சித்தூர் பக்கத்துலே பெரிய ஜெமீன் பங்களாவிலே ஷூட்டிங். ரூமை விட்டு ஸ்பாட்டுக்கு கிளம்பும்போது ஒரு கூரியர் பார்சல் வந்தது. அட ஸ்னேக் குட்டி.. சிச்சீ... என் ஸ்னோ.. ப்ரிய ஸ்னோ தான் அனுப்பியிருக்கா. பிரிக்க நேரமில்லை. ப்ளோர்ல பார்த்துக்கலாம்.

மனசெல்லாம் குறுகுறுன்னு ஒரு சந்தோஷம். பார்சலை பிரிச்ச பிறகு இந்த ஆவல் தரும் சந்தோஷம் இருக்குமோ என்னவோ? முதல்ஷோ ஆடியன்ஸ் ரியாக்ஷன் பார்க்க காத்திருக்கும் டைரக்டர் போல பரபரன்னு இருக்கு.

தளத்துக்கு இன்னும் ஹீரோயின் வரவில்லை. ஒரு ஓரம் போய் பார்சலைப் பிரித்தேன். ஒரு ஊதா நிற ஸ்வெட்டர்; மார்பின் இடது பக்கத்தில் ஹிந்தியில் ஸ்னேகல் என எம்பிராய்டரி செய்திருந்தாள். சென்னையில் எதுக்கு ஸ்வெட்டர்?

கொஞ்சம் ஏமாற்றமாயிருந்தாலும் அவள் கைப்பட்ட ஸ்வெட்டரை ஆசையாய் முகத்தில் வைத்துக் கொண்டேன். கொஞ்சம் யூகலிப்டஸ் தைல வாசமோ...சீ என்னவொரு புத்தி எனக்கு?

ஸ்பாட்டில் பெரிய டைரக்டர் போட்டுக் கொண்டிருந்த கூச்சலில் கலைந்து என்னவென்று பார்த்தேன். மேக்கப்மேன் செல்வம் அண்ணனை என்னாச்சு என்று கேட்டேன்.

அன்றைய காட்சியில், கதாநாயகன் குளிர் ஜுரத்தோடு படுத்திருக்க அவனுக்காக கதாநாயகி ஸ்வட்டர் பின்னி எடுத்துவந்து,அதைப்  போட்டுவிட வேண்டுமாம். படப்பிடிப்பு சாமான்களில் ஸ்வெட்டர் இல்லையாம் . அதுவும் மேமாத வெய்யிலில் உள்ளூர் கடைகளில் ஸ்வெட்டர் எங்கு கிடைக்கும்?. யார் வீட்டிலாவது பழைய ஸ்வெட்டர் வாங்கிவர ப்ரொடக்ஷன் ஆள் போயிருக்கிறது. பழசையெல்லாம் போடமாட்டேன் என்று நடிகர் சத்தம் போட்டாராம். ஹீரோவை சத்தம் போடமுடியாமல், டைரக்டர் பொதுக் கூச்சலாய் போட்டபடி இருக்கிறாராம்.

சரசரவென்று ஹீரோவை அணுகினேன். “சார்! இந்த ஸ்வெட்டரைப் போட்டு பாருங்கள்” என்று ஸ்னேகல் அனுப்பிவைத்ததை நீட்டினேன். “புதுசு தான் சார்!”

அதைக் கையில் வாங்கியபடி “புதுசு போலத்தான் இருக்கு....ஆனா கொஞ்சம் நீலகிரித் தைலம் வாசம் வருதேப்பா?’ என்றார் ஹீரோ.

“அந்த வாசம் உங்களுக்கு கொஞ்சம் காட்சிக்கான ‘சிக் மூடை’க் கொடுக்கும் என்று தான் லேசாக தைலம் தெளித்தேன் சார்!”
“ப்ரில்லியன்ட்! ஐ லைக் யூ மேன்!” என்றார்.

டைரக்டருக்கும் முகம் பிரகாசமாகி விட்டது. கதாயாயகியும் ஊதாக்கலர் ஷிப்பான் புடவையில் வர டைரக்டரிடம் சொன்னேன்...

“இன்னைய படப்பிடிப்புக்கான மேடத்தோட புடவைக்கலர் பற்றியும், ஸ்வெட்டர் பற்றியும் நீங்கள் நேற்று பேசும்போது கேட்டுக்கிட்டுதான் இருந்தேன் சார்! அதான் ராத்திரியோட ராத்திரியா ஊதா புடவைக்கு மேட்சிங்கா, என் மனைவியை ஊதாக்கலரில் இதைப் பின்ன சொன்னேன் சார்! எதுக்கும் ஸ்பேரா ஒண்ணு இருக்கட்டுமேன்னு தான்! பாபாவோட அருள் பாருங்க... சமயசஞ்சீவியா இந்த ஸ்வெட்டரே கைகொடுத்துருச்சு சார்!” என்று அள்ளி விட்டேன். டைரக்டர் சாய்பாபா பக்தர்ங்கிறது இப்போ உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா?

“என்ன டெடிகேஷன்?! என்ன முன்யோசனை! என் அடுத்த படம் ஜூலை மாசம் துவங்குது. நம்ம சார் தான் அதுலயும் ஹீரோ. என்னோட மூன்று அஸ்ஸோசியேட் டைரக்டர்ஸ்ல நீயும் ஒருத்தன். உன் கிட்ட ஒரு ஸ்பார்க் இருக்குய்யா....”என்ன சார் சொல்றீங்க?” என்று ஹீரோ சாரை நோக்கினார்.

“நல்ல ஐடியா!” என்று ஆமோதித்தார் ஹீரோ. “இதுல என்னப்பா ஏதோ எம்ப்ராய்டர் பண்ணி இருக்கு ஹிந்தில?”’

‘ஸ்னேகல்’ன்னு என் மனைவி பேர் சார்! அவள் பெயர் ஒரு மூலையிலே ஸ்க்ரீன்ல வரணும்னு அவளுக்கு ஆசை சார்! என்றேன்.

‘ஸ்னேகல்; நல்ல பேரு... ஹிந்திக்காரியா? சாரி! உன் சம்சாரம் நார்த் இந்தியாவா?

“ஆமாம் மும்பை பொண்ணு சார்!”

“நல்ல பேரு! ஜி.கே! ஷூட் பண்றப்போ ஸ்வெட்டர்ல இருக்குற இந்த பேரை ஒருதரம் டைட்டா ஜூம் பண்ணி எடுங்க!. சிஸ்டர் படம் பார்க்கும் போது சந்தோஷப்படுவாங்க ! ஹாப்பியா மேன்? உன் பேர் என்ன?

“வாசு சார்”
“வாசு.. மை பியூச்சர் டைரக்டர்! குட்!!”

வானில் மிதந்தேன்.

அடுத்த வாரம் மும்பை போகிறேன். என் அதிர்ஷ்ட ராணி ஸ்னோவை கல்யாணம் பண்ணிக் கொள்ள... அலோக்குடன் டிரங்கால் போட்டுப் பேசிமுடிச்சாச்சு.பைகுல்லா ரிஜிஸ்தர் ஆபீசில் சிம்பிளா கல்யாணம். சித்தி விநாயக் கோவில்ல அர்ச்சனை பண்ணிக்கிட்டு, அப்படியே சந்தோஷிமா சாட்கார்னர்ல ஜிலேபி, வடாபாவ், மசால் தோசா, பானிபூரி, புதினா சாய் வச்சு பத்துபதினைஞ்சு குடும்பங்களுக்கு ஒரு டின்னர். நாலே நாள். அப்புறம் சென்னை திரும்பி, மாயவரத்துக்கும் ஒரு நடை அம்மாவைப் பார்த்து நமஸ்காரம் பண்ணிட்டு வரணும். இத்தனை நாள் பார்க்கவராத தறுதலை, பம்பாய்க்காரியை கல்யாணம் பண்ணின பிறகு சமத்தா இருப்பேன்னு அம்மா நம்பணும். அம்மா என் கூடவே வந்தாள்னா எவ்வளவு நல்லாருக்கும்? இவ்ளோ நாழியா படிக்கிற நீங்கதான் ஆசீர்வாதம் பண்ணனும்.

மச்சினன் அலோக்குக்கும் ஒரு ராஜேஷ்கன்னா படத்துல வேலைசெய்ய வாய்ப்பு கிடைச்சிருக்காம். அவங்க அம்மாவோட கேன்சர் என்னாச்சுன்னு கேக்குறீங்களா? அவங்களுக்கு வெறும் கேஸ் ட்ரபிள்தான்னு டாக்டர் சொல்லிட்டாராம். அவுங்க சின்னசின்ன ரோல் டிராமா சினிமாவுலல்லாம் செய்வாங்களாம்... நல்லா க்ரோஷா வொர்க், எம்ப்ராய்டரில்லாம் தெரியுமாம். ஸ்வெட்டர் எல்லாம்கூட பின்னுவாங்களாம்.

இதெல்லாம் என்னோட ‘பியார் கி புல்புல்’ ஸ்னேகல் தான் சொன்னா. எனக்கு இனிமே கைச்சமையல் பண்ணிக்கிற  கஷ்டம் எல்லாம் இல்லை. சொல்ல மறந்துட்டேனே! நான் ஸ்னேகலை முதல்ல பார்த்த அன்னைக்கு காலைல ‘ப்போகா’ன்னு ஒரு டிபன் பண்ணியிருந்தா பாருங்க! அடடா! அதெல்லாம் உங்களுக்கென்ன தெரியும்? எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பினை வேணும். என்ன நான் சொல்றது??

புதன், மார்ச் 16, 2016

கூளம் : எங்கள் BLOGல் என் சிறுகதை. 

Tuesday, March 15, 2016

  11/11  



கேட்டு வாங்கிப் போடும் கதை :: கூளம்



நண்பர், எழுத்தாளர் மோகன்ஜி யின் படைப்பு இந்த வாரம் 'கேட்டு வாங்கிப் போடும்  கதை'பகுதியில்.

நண்பர் மோகன்ஜியின் தளம் வானவில் மனிதன்.  பாசமான நண்பர்.  கவிஞர்.   கதைகள், கட்டுரைகள் எழுதுவார்.

 இந்தக் கதைக்கு ஒரு முன்னுரை போலவே கடந்த வாரம் தனது தளத்தில் விக்ரமன் ஸார் பற்றி அவர் ஒரு  பதிவை வெளியிட்டு இருக்கிறார்.   சுப்பு தாத்தா உட்பட எல்லோரும் அந்தப் படைப்பைப் படிக்க அங்கு ஆவலுடன் காத்திருக்க, அந்தப் படைப்பு இங்கு வெளியாவதில் எங்களுக்குப் பெருமை.  நன்றி மோகன்ஜி!   'கதை குறித்த உங்கள் கருத்தையும் அனுப்பிவிடுங்கள் ஜி'  என்று கேட்டிருந்தேன்.  இதோ அவரது பதிலும், அதைத் தொடர்ந்து அவர் கதையும்.

==============================================================

இந்தக் கதை குறித்த ஒரு அறிமுகம்

நலம் தானே!  ‘எங்கள்பிளாக்’ ஸ்ரீராம் என்னிடம் ஒரு கதையைஅனுப்பக் கேட்டபோது எழுத்தாளர் விக்கிரமன் சார் அவர்களிடம் ‘அமுத சுரபி’ இதழுக்காய் நான் தந்த இந்தக் கதை நினைவுக்கு வந்தது.  இதை எழுதி இருபத்து மூன்று வருடங்களாகி விட்டன. அமரர் விக்கிரமன் அவர்களிடம் எனக்கு நல்ல பரிச்சயம் இருந்தது. ஒரு சந்திப்பின் போது எனது கதையொன்றை தரச் சொன்னார்.  இணைத்துள்ள கதையை தந்தேன்.  கதைக்கு ‘பேப்பர் ரோஸ்ட்’ என்று தலைப்பு வைத்திருந்தேன். கதை மிக நன்றாக இருப்பதாகப் பாராட்டினார்.  தலைப்பை மட்டும் ‘கூளம்’ என்றோ ‘பழையன கழிதலும்’ என்றோ மாற்றிக்கொள்வதாயும் சொன்னார்.  ‘கூளம்’ நல்லா இருக்கு சார்! என்றேன்.


அந்த சமயம்,தமிழ்நாட்டை விட்டு நான் ஆந்திராவின் ஒரு மூலைக்கு மாற்றலாகி இருந்த நேரம்.. அந்தக் கதை வெளி வந்த விவரமோ, இதழோ, எதுவும் என்னிடமில்லை. கதைக்கு நான் வைத்த ‘பேப்பர் ரோஸ்ட் என்ற பெயர் ஏன் வேண்டாமென்று அவர் சொன்னார் என்பது, நீங்கள் கதையை முடிக்கும்போது உணர்வீர்கள்.


விக்கிரமன் சார் எளிமையானமனிதர்.  நான் சந்தித்த இனிமையான ஆளுமைகளில் முக்கியமானவர்.  அவரை பற்றி ஒரு அனுபவப்பகிர்வை ‘வானவில் மனிதனில்’ எழுதத் தூண்டிய ஸ்ரீராம் அவர்களுக்கு என் நன்றி!
நான் தவறாமல் ரசித்து உலாவும் வலைத்தளம் எங்கள் BLOG.  வானவில் மனிதனுடன் மிக நெருக்கமான வலைப்பின்னல் கொண்டது. அதில் இந்தக் கதை இடம்பெறுவது எனக்கு மகிழ்ச்சியே!

இனி கூளம் சிறுகதை!


 =====================================================================


கூளம் 

மோகன்ஜி



மதுரம் காலையிலேயே சபேசனை பிலுபிலுவெனப் பிடித்துக்கொண்டாள்.  

இன்னும் நாற்பதே நாள்.. நம்ப அம்பி அமெரிக்காவுலேயிருந்து குடும்பத்தோட இங்க வந்துடுவான். அவன் எத்தனை சாமான் செட்டோட வருவானோ?  காலம்காலமா சேத்து வச்சிருக்கேளே, பொட்டி பொட்டியா புஸ்தகமும் காகிதமுமா ...கூளம்.. கூளம்... இதையெல்லாம் உடனடியா காலி பண்ற வழியைப் பாருங்கோ.  சொல்லிட்டேன்....  இண்டு இடுக்குவிடாம அப்படி என்னத்தைதான் திணிச்சு வைப்பேளோ?  மாத்தலான  ஒவ்வொரு ஊருக்கும் உங்களோட இந்த பொக்கிஷத்தைக் கடத்தறத்துக்குள்ள எனக்கு உயிர் போய் உயிர் வரும்.. ரிட்டையர் தான் ஆயாச்சே?  இன்னுமென்ன இருக்கு? இதையெல்லாம் தலைலே கட்டி எடுத்துகிட்டா போகப் போறோம்?”


ஏன்? ஒண்ணு பண்ணேன்... நான் போயிட்டா கட்டை, வரட்டி  வாங்க வேண்டாம். என்மேல இதையெல்லாம் குமிச்சு என்னை கரையேத்திடேன்


காலங்காத்தால நல்ல வார்த்தை வாயில வருதா?  வயசானா ஒரு நிதானம் வேண்டாம்?  உங்கச் செல்ல மருமக போன விசை வந்தப்போ சொன்னாளே.... மாமாவுக்கு ஒரு கல்யாண மண்டப ஹால் கூட பத்தாதும்மா! ன்னு... என்னத்தையோ பண்ணுங்கோ..  எனக்கென்ன?  ரயிலடிக்கு வண்டி ஏத்திவிட வருவேளா இல்லே நானே போகவா?"


வந்துத் தொலயறேன்.. நீ உன் மூட்டையக் கட்டிகிட்டு கிளம்பு.. உங்கண்ணா தந்த சீதனம்னு வத்தலும் ஊறுகாயும் வாரிக்கிட்டு வர வேண்டாம்..  ஏற்கெனவே உனக்கு பி.பி எகிறிக் கிடக்கு


மதுரம் அப்படி எங்கு போகப் போகிறாள்?....  தன் அண்ணன் வீட்டுக்கு மூணு நாள் போய் வருவதற்குள் இந்த ஆராட்டம்..


ஸ்டேஷனுக்கு போகும்போது மதுரம் சமாதானமாகி விட்டாள். 


டிக்கெட், பணமெல்லாம் எடுத்துகிட்டியோன்னோ?”


எழும்பூர் ரயிலடியிலிருந்து திரும்பும்போது பஸ்ஸில் மருமகளின் அங்கலாய்ப்பாய் மதுரம் சொன்னதுதான் சபேசன் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. பிள்ளை வாங்கிக் கொடுத்த வீடுதான். மூன்று ரூமிலும் அலமாரிகள், லாப்ட்டுகள், கட்டிலின் கீழ் என்று அட்டைப் பெட்டி, கள்ளிப் பெட்டி என்று கட்டுக்கட்டாய் காகிதங்கள், பைல்கள், புத்தகங்கள். லேசில் ஒரு கடுதாசியை சபேசன் தூக்கி எறிந்துவிடமாட்டார்.


‘மதுரம் சொல்வதும் உண்மை தானே? .எதற்காக இவற்றையெல்லாம் சுமந்து கொண்டிருக்கிறேன்? இவற்றை வைத்துக் கொண்டு என்னதான் செய்யப் போகிறேன்? வீட்டுக்கு போனதும் பழசையெல்லாம் ஒழிக்க வேண்டியதுதான். வேறு ஒன்றும் தலை போகிற வேலையில்லை. செய்துவிட வேண்டியது தான்.’ பரபரவென்று தீர்மானமாய் மனசில் பட்டுவிட்டது.  சட்டென்று ஒரு விரக்தியும் விடுபடலும் உணர்ந்தார். 


வீட்டுக்குள் நுழைந்தவுடன் ஒரு முறை சுற்றிலும் நோட்டம் விட்டார். உண்மைதான். ஒரு கொடோனாகத்தான் வீட்டை  அடித்து விட்டிருக்கிறோமென்று பட்டது. அப்புறமாய்ப் பார்த்துக் கொள்ளலாம் எனும் நினைப்பு எழுமுன்னர் வேலையைத் தொடங்கிவிட வேண்டும் என்ற உத்வேகம் எழுந்தது. அதே சுருக்கில் வடக்குக்கோடி அறை லாப்டில் இருந்த அட்டை டப்பாக்களை ஸ்டூல் மேலேறி நின்றுகொண்டு கீழே இறக்கினார். பெரிய பெட்டிகள் சிலவும் இருந்தன. பால்கனிக்கு வந்து வாட்ச்மேனை கூப்பிட்டார். 

அவன் உதவியோடு பெட்டிகளனைத்தையும் இறக்கியாயிற்று. பெட்டிகளை அரைவட்டமாய் தள்ளிவிட்டு கத்தி, கத்திரிக்கோலுடன் நடுவில் அமர்ந்தார்.  


முதல் பெட்டியைப்பிரித்தார். இரண்டு கட்டுகளாய் தன் குழந்தைகளின் பள்ளிக்கூட பிராகிராஸ்கார்டுகள். அம்பி எனும் விக்னேஷ் எப்போதும் முதல் ராங்க் தான் ! இது உமாவின் கார்டு அல்லவாஎட்டாங்கிளாஸ்  பிரிவு. காலாண்டில் இருபத்தியெட்டாம் ராங்க். கணக்கில் நாற்பத்தியொன்று.... கழுதை.. லேசில் படிக்க உட்காருவாளா என்ன ? ஆனாலும் ரேங்க் கார்டில் கையெழுத்து வாங்கு முன் அவள் போடும் நாடகம் இருக்கிறதே! தன் விரல்களில் சொடுக்கெடுத்து, அன்று மட்டும் சபேசன் குளிப்பதற்கு வெந்நீர் விளாவி,‘ நீயேன் கண்ணு இதெல்லாம் செய்யிறே?’ என்று கேட்டால், ’என் செல்ல அப்பாவுக்கு நான் செய்யாமல் வேறு யார் இதெல்லாம் செய்வாங்க என்று புஜத்தைக் கட்டிக் கொள்வதும், ஆபீஸ் செல்வதற்கு செருப்பை மாட்டிக் கொள்ளும் சமயம் அப்பா.. என்று கீழ்க்குரலில் குழைந்து பிராகிராஸ்கார்டை கையெழுத்து வாங்க நீட்டுவதும்.... 

‘என் அருமை மகளே ! நீயேன் பெரியவளானாய்? ஏன் என்னை விட்டு எங்கோ பிறந்த ஒருவனுக்காய் நாடு விட்டு நாடு போய் சமைத்துப் போட்டு,, குழந்தைகள் பெற்றுக் கொண்டு.. இங்கே வரும் சமயமெல்லாம் அவர்களைப் பற்றியே ஓயாமல் பேசிக்கொண்டு..... இந்தக் கிழவனுக்காய் உனக்கு சற்றேனும் நேரமிருக்கிறதா உமா?


ஒரு அட்டை ஃபைலில் இருந்து விழுந்த போட்டோவைக் கண்டபோது  புன்னகை அரும்பியது... இது தானும், மதுரமும் கல்யாணமான பத்து நாட்களில் எடுத்தது.. வாசன்ஸ்டூடியோ என்ற நீல வில்லை கீழோரமாய்... 


அம்மா சாரை நல்லா ஒட்டி நில்லுங்கம்மா”.


மதுரத்துக்குத்தான் என்ன வெட்கமும் மருட்சியும் கண்களில்??


போறும், பொழுதுக்கும் புருஷனை ஒட்டிண்டு திரிய வேண்டாம்.. நாலு பேர் வரப்போக இருக்கிற வீடு.. ஏகாங்கி லோக ரட்சகான்னு ‘ஓ’ன்னு நிக்கிற குடும்பமில்லே இது.. 

அம்மாவின் வார்த்தைச் சாட்டை இப்போதும் காதுகளில் வீறியது. 'மதுரா.. நிறையத்தான் பட்டுட்டே..'


மனைவிக்கு தான் எதுவுமே செய்யவில்லையோ என்ற எண்ணமும், அது தந்த கழிவிரக்கமும் சபேசனுக்கு கடைவிழிகளில் கண்ணீராய் தகித்தது. மிச்ச காலமேனும் உனக்கு அனுசரணையாய் இருப்பேன் மதுரா..  மதுரா என்று மனசு அரற்ற, மீண்டும் காகித அடுக்குகளின் நடுவில் உட்கார்ந்தார்.


அடுத்த கள்ளிப்பெட்டியை தரையில் சாய்த்தார். அந்த மெலிந்திருந்த மஞ்சள் நிற ஃபைலை கண்டவுடன் சபேசனுக்கு சட்டென்று முதுகில் சொடுக்கி விட்டாற்போல் இருந்தது..  மெள்ளஃபைலைத்திறந்தார். 

முதல் காகிதமே,. ’ஏன் உங்கள் மேல் நடவடிக்கை எடுக்கக் கூடாது?’ என்ற அலுவலக மெமோ. 

நிறுவனத்தின் சார்பில் சபேசன் இட்ட ஒரு ஒப்புதல் கையெழுத்தால் ஏற்பட்ட பத்தாயிரம் ரூபாய் நஷ்டத்திற்கு ஒழுங்கு நடவடிக்கை. தன்மேல் விசாரணை நடந்த ஒரு ஆறு மாதகாலம் தன் மனதில்  பாறாங்கல்லாய் விழுந்த மரண வேதனை. சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல்... எல்லோரும் தன்னைப் பார்த்து கைக்கொட்டி சிரிப்பது போல் குமைந்து தலைகவிழ்ந்து ஊர்ந்த நாட்கள். 

கையிலிருந்த மெமோ அந்த வேதனையின் சாசனமாய் ஓரங்கள் மடங்கிசபேசனை மீண்டும் அந்த ரணகளத்தில் தள்ளியது. குற்ற உணர்வும் பதைபதைப்பும் இருண்ட மேகமாய் சட்டென்று அவர் மேல் கவிந்தது. மறக்க முயன்றும் முடியாமல் அந்த நிகழ்வு இறுகி மனதின்ஆழத்தில் கசடாய் படிந்திருந்தது. அந்தக் கசடைக் கிளறாதவரை துக்கமில்லை. கட்டையோடு தான் அந்தக் கசடும் கரையும்..


கடைசியில் அலுவலகம் அவரை மன்னித்து விட்டது. பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் இருக்கும் போது இப்படி கவனக் குறைவாக இருக்கலாமா?’ என்று அவருடைய உயரதிகாரி சாதாரணமாய்த்தான் சொன்னார்.  சபேசன்தான் தன்னையே மன்னித்துக் கொள்ளவில்லை. இனி பதவி உயர்வுக்கென முயல்வதில்லை என்ற வைராக்கியம் ஏற்பட்டு விட்டது. அலுவலகப் பொறுப்பில் தான் இருந்த நிலையிலேயே சொச்ச காலத்தையும் தள்ளினார்.


எல்லாமும் படக் காட்சிபோல் சபேசனின் மூடியிருந்த கண்களிலாடின. இந்த மெமோவை என்ன செய்வது.? தன் இடப்புறமாய் இருத்திக் கொள்ள வேண்டி வைத்த சில தாள்களோடு அதை வைத்தார். எதற்கு இந்த வடுவை இன்னும் சுமக்க வேண்டும் ? 

மெமோவை மீண்டும் கையிலெடுத்தார். இரண்டாய்க்கிழித்தார். நாலாய், பதினாறாய், நூறாய் உருத் தெரியாமல் அது துணுங்கியது. வாயருகில் அந்தக் குப்பலைக் கொண்டு வந்து வாய்குவித்து வேகமாய் ஊதினார். ஆனாலும் பலம் குன்றிய அந்த ஊதலில், அத் துணுக்குகள் பரவலாய் சிதறாமல், சபேசன் மடியிலேயே விழுந்தன. அவற்றை உதறித் தள்ளினார். 

படபடவென்று வந்தது. சற்று ஆசுவாசப் படுத்திக்கொண்டார். எழுந்து போய் பனியன் நனைய மடமடவென்று தண்ணீரை வாயில் சரித்துக்கொண்டு மீண்டும் காகித அடுக்கல்கள் மத்தியில் அமர்ந்தார். இந்தக் காகிதங்களைக் கிழித்து எறிந்து ஒழிப்பது போல் நினைவுகளையும் ஒழிக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?’


இந்த பெட்டியோடு, அடுத்த மூன்று பெட்டிகளிலும் அலுவலகக் காகிதங்கள்.  மாதசம்பளக் குறிப்புகள், விடுப்பு விண்ணப்பங்களின் கார்பன் காப்பிகள், பயணப்படி காகித நகல்கள், இன்னமும் ஏதேதோ அடைந்திருந்தன.


அந்த குப்பலிலிருந்து சில ‘ராமபாண’ பாச்சைகள் ஓடின. அதன்வடிவத்தைப் பார்த்து அப்படியொரு பேரை அதற்கு வைத்தவன் ஒரு நல்ல ரசிகன் என்று எண்ணிக்கொண்டார்.


நிறம் பழுத்து ஏறத்தாழ மக்கியிருந்த அந்தக் காகிதங்கள் கிழிக்க லகுவாக மெத்தென்று அவர் விரல்களின் இழுப்பிற்கு கிழிபட்டன. சபேசனுக்கு இந்த அழிப்பு நாடகத்தில் ஒரு உற்சாகமோ அல்லது வெறியோ உண்டாகி கட்டுக்கட்டாக காகிதங்களை துவம்சம் செய்யலானார். 

முப்பத்தெட்டாண்டு கால அலுவலக வரலாறு.. யாருக்கு வேண்டும். தந்த சம்பளத்துக்கு பலமடங்கு உழைத்துக் கொட்டி, தின்ற உப்புக்கு பிரதி செய்தாகிவிட்டது


இது வரை ஏழெட்டு அட்டைப்பெட்டிகளில் இருந்தவை மோட்சம் பெற்றிருந்தன. இன்னமும் நிறைய இருக்கிறது. மனது மீண்டும் மாறி இன்னும் இந்தக் காகித சிலுவையை சுமக்க யத்தனிக்குமுன் இவற்றின் சுவடே இல்லாமல் அடித்துவிட வேண்டும்.. மதுரம் திரும்ப வந்து கூளம் ஒழிந்த காலியிடத்தை தன் ஆச்சர்யத்தாலும் சந்தோஷத்தாலும்நிரப்பிக்கொள்ளட்டும்.


இந்தக் கள்ளிப்பெட்டியில் இருப்பது  தினசரி மற்றும் வாரப் பத்திரிக்கைகளில் இருந்து கத்தரித்து சேமித்தவை. எளிய யோகமுறை, வேப்பிலையின் பயன்கள், குழந்தைகளுக்கு எதை எப்படி சொல்லித் தருவது?, ஆன்மீக உபதேசங்கள், ஏதேதோ கட்டுரைகள், சில கதைகள் ... எல்லாமே உதிரியாய் அடுக்கி இருந்தன. இதில் தேவையானவை என்ன.. இப்போது எதைப் படிக்கிறோம்?  எதுவுமில்லை..... 

பெட்டியோடு வேண்டாமென்று ஒதுக்கினார். 

பழைய ரீடர்ஸ் டைஜெஸ்ட் கட்டுகள், ஏதோ இலக்கிய பத்திரிக்கைகள், ராமஜெயம் எழுதின நோட்டு புத்தகங்கள்., கடிதக் கட்டுகள்,ஏதோ ஜாதகக் குறிப்பு ‘ஸ்வஸ்திஸ்ரீ நிகழும் பிரஜோத்பத்தி வருஷம் மாசி மாதம்...‘ எல்லாமும் ஒதுக்கப்பட்டன.  மூலைக்குஒதுங்கின. 


கழித்துக் கட்டும் மனவோட்டம் சபேசனை ஆட்கொண்ட பின், ஒழித்தல் வேகம் பிடித்துவிட்டது. ‘இவற்றையெல்லாம் ஒரு ஆயுளுக்கும் சேர்த்து, ஏதோ ஒரு சமயம் உபயோகிக்கப்போகிறோம் என்றுதான் எல்லோருமே எல்லாவற்றையும் சேமிக்கிறார்கள். எதிர்ப்பார்த்த அந்தக் காலம் வருவதற்கு முன்னரே எல்லாமும் முடிந்து விடுகிறது.. வீண்.. எல்லாமுமே வியர்த்தம்... எதற்கும் அர்த்தமில்லை என்று எண்ணிக்கொண்டார்.


அடுத்த ஆறுமணி நேர துவந்த யுத்தத்தில், கால்கள் திமிரேறி இழுத்ததால் ஒரு முறை மட்டுமே எழுந்தார்..  ஆச்சு..  ஏறத்தாழ முடிந்து விட்டது..


இருக்கட்டும் என்று ஒதுக்கிக் கொண்டது சில பழைய போட்டோக்களும், குழந்தைகள் கிறுக்கிய சில தாள்களும், குழந்தைகளின் கல்யாணப்பத்திரிக்கைகளும், சில புத்தகங்கள் மட்டுமே.


அறையின் அத்தனை மூலைகளிலும் கிழிபட்ட காகிதங்களும், புத்தகங்களும், காலி பெட்டிகளும் குவிந்து கிடந்தன. வாட்ச்மேன் வேணுவிடம் பத்து ரூபாய்க் கொடுத்தால் எல்லாவற்றையும் அள்ளிக் கொண்டு போய் விடுவான்.


சபேசன் பாத்ரூமுக்குள் நுழைந்தார். சோப்பைக் கையிலெடுத்துக் குழைத்தார். கையழுக்கு சோப்பைக் கருப்பாக்கி விட்டது.. சுத்தப்படுத்தும் வஸ்துவைக் கூட அழுக்காக்க மட்டுமே முடிந்த தன் உள்ளங்கைகளை ஒரு முறை பார்த்துக் கொண்டார். கொட்டும் நீரில் கைகள் சுத்தமானது. உள்ளங்கைகள் சிவந்து பளீரிட்டது. முகத்தில் நீரை வாரிவாரி அடித்துக்கொண்டார். காசித்துண்டால் துடைத்தபடி ஹாலுக்கு வந்தார். மணி நாலாகிவிட்டது. அகோரமாய்ப் பசித்தது. மதியம் ஏதும் சாப்பிடவில்லை எனும் நினைவே அப்போதுதான் வந்தது.


சமையலறைமேடையில் சாதம்வடித்து, கத்தரிக்காய்க் கறியும், வத்தக்குழம்பும் செய்து வைத்திருந்தாள். எனினும் அதை  சாப்பிடத் தோன்றவில்லை. வெளியில் போனால் தேவலைபோல் தோன்றியது. வேட்டியை மாற்றிசட்டையையும் மாட்டிக்கொண்டு வீட்டையும் பூட்டிக்கொண்டு லிப்டில் இறங்கினார். எதிர்ப்பட்ட வாட்ச்மேனை அரைமணி நேரம் கழித்து குப்பைகளை அகற்ற வரச் சொல்லி விட்டு மஹேந்திர விலாஸ் ஹோட்டலை நோக்கி நடந்தார். 


சட்டென்று ஒரு பெரும் காற்று வீசி மூச்சைத் திணறடித்தது. புழுதி கிளம்பியது. வீதியில் கிடந்த காகிதங்கள் காற்றில் சுழன்றன. வேட்டி நுனியை பிடித்தபடி ரோட்டோரம் இஸ்திரிவண்டியின் அருகே  ஒதுங்கி நின்றார். காற்று வெளியில் சுழன்ற காகிதங்கள் அவரைச் சுற்றி கும்மியடிப்பது போல் சபேசனுக்குத் தோன்றியது.. காற்று அடங்க ஹோட்டலுக்குள் நுழைந்தார்.  ஓரிருவர் மட்டும் காபி அருந்தியபடிஅமர்ந்திருந்தனர். 


என்ன சார் வேணும்?”


லைட்டா என்னப்பா இருக்கு?”


போண்டா பஜ்ஜியெல்லாம் இன்னமும் அரைமணிக்காகும்.. தோசை ஐட்டங்கள் தான் இருக்கு.


சரி.. ஒரு பேப்பர் ரோஸ்ட் கொண்டா


சரி சார்..


‘பேப்பர்’ரோஸ்ட்..  சை!!..'  சபேசன் நாக்கைக் கடித்துக் கொண்டார்.

125 comments:

திண்டுக்கல் தனபாலன் said...
‘ராமபாண’ பாச்சைகள் //

ரசித்தேன்...
வை.கோபாலகிருஷ்ணன் said...
மிக மிக அருமையான கதை. ஒவ்வொரு வரியையும் மிகவும் ரஸித்து ருசித்து சாப்பிட்டேன் ... பேப்பர் ரோஸ்ட் போன்ற இந்தக்கதையை.

>>>>>
திண்டுக்கல் தனபாலன் said...
த.ம. இணைத்து ஓட்டும் போட்டாச்சி... யப்பா... என்னவொரு சிரமம் ...
வை.கோபாலகிருஷ்ணன் said...
“இன்னும் நாற்பதே நாள்.. நம்ப அம்பி அமெரிக்காவுலேயிருந்து குடும்பத்தோட இங்க வந்துடுவான். அவன் எத்தனை சாமான் செட்டோட வருவானோ? காலம்காலமா சேத்து வச்சிருக்கேளே, பொட்டி பொட்டியா புஸ்தகமும் காகிதமுமா ...கூளம்.. கூளம்... இதையெல்லாம் உடனடியா காலி பண்ற வழியைப் பாருங்கோ. சொல்லிட்டேன்.... இண்டு இடுக்குவிடாம அப்படி என்னத்தைதான் திணிச்சு வைப்பேளோ? ... ரிட்டையர் தான் ஆயாச்சே? இன்னுமென்ன இருக்கு? இதையெல்லாம் தலைலே கட்டி எடுத்துகிட்டா போகப் போறோம்?”

இது என்னைப்பார்த்து என் மனைவி இன்று சொல்லுவது போலவே உள்ளது.

//“ஏன்? ஒண்ணு பண்ணேன்... நான் போயிட்டா கட்டை, வரட்டி வாங்க வேண்டாம். என்மேல இதையெல்லாம் குமிச்சு என்னை கரையேத்திடேன்”//

இது நான் என் மனைவியிடம் சொல்ல நினைப்பது போலவே தத்ரூபமாக உள்ளது.

>>>>>
வை.கோபாலகிருஷ்ணன் said...
http://gopu1949.blogspot.in/2013/03/1.html

இந்த மேற்படி பதிவினில் என் இதுபோன்ற அனுபவங்களை அப்படியே எழுதியுள்ளேன்.

>>>>>
ஸ்ரீராம். said...
நீங்களும் நானும் ஒரே நேரத்தில் சப்மிட் செய்து வோட்டுப் போட்டிருக்கிறோம் டிடி. விழுந்தது என் வோட்டு. ஏனென்றால் நான் மறுபடி வாக்களித்தால், ஏற்கனவே உங்கள் வோட்டு சேர்க்கப்பட்டுள்ளது என்கிறது!!

:)))
ஸ்ரீராம். said...
நன்றி வைகோ ஸார். உடனடி வரவு. மேலும் ரசனையான வாசிப்பு. அழகான பின்னூட்டங்கள்.

நீங்கள் கொடுத்துள்ள சுட்டியைக் க்ளிக்கி (மீண்டும்) படித்தேன். படித்து விட்டு மனதுக்குத் தோன்றிய கருத்துரையை எழுத ஸ்க்ரால் செய்தால் கிட்டத்தட்ட அதே கருத்தை நான் ஏற்கெனவேஅந்தப் பதிவில் இட்டிருக்கிறேன்! ஹிஹிஹி...
வை.கோபாலகிருஷ்ணன் said...
http://gopu1949.blogspot.in/2013/03/1.html மேற்படி என் பதிவினில் 138 பின்னூட்டங்கள் (என் பதில்கள் உள்பட) குவிந்துள்ளன. மீண்டும் ஒருமுறை அவற்றைப் படித்துவிட்டு இங்கு வந்ததால் சற்றே இடைவெளியுடன் இங்கு வர தாமதமாகிவிட்டது.

>>>>>
வை.கோபாலகிருஷ்ணன் said...
http://gopu1949.blogspot.in/2011/07/3.html திருச்சியில் ஓர் பத்தாண்டுகளுக்கு முன்பு ’உலகத்தமிழ் எழுத்தாளர்கள் சங்கம்’ என்று திரு. வேம்பு சார் (விக்கிரமன்) அவர்களின் தலைமையில் துவங்கப்பட்டது.

அதில் அன்று நான் உறுப்பினராகச் சேர்ந்துகொண்டு, அதற்கான அடையாள அட்டையும் பெற்றுக்கொண்டேன்.

அன்றுதான், அந்த நிகழ்ச்சியில்தான், நான் அவரை நேரில் சந்திக்கும் பாக்யம் எனக்குக் கிடைத்தது. மேடையில் இருந்த அவரை நான் ஏனோ புகைப்படம் எடுக்காமல் விட்டுவிட்டேன். இப்போது நினைக்க என் மனதுக்கு வருத்தமாக உள்ளது.

>>>>>
R.Umayal Gayathri said...
கதை தத்ரூபமாக நகர்கிறது. நன்றி சகோ.
மோகன்ஜி அவர்களுக்கும் நன்றி

தம +1
வை.கோபாலகிருஷ்ணன் said...
கதாசிரியர் திரு. கோகன்ஜி அவர்களுக்கு என் பாராட்டுகள். நல்வாழ்த்துகள்.

இதனை இந்தப் பதிவின் மூலம் படிக்க வாய்ப்பளித்த ’எங்கள் ப்ளாக்’க்கும் குறிப்பாக நம் ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் அவர்களுக்கும் என் நன்றிகள்.

அன்புடன் VGK
Geetha Sambasivam said...
ஒவ்வொருவருக்கும் ஏற்படும் அனுபவம். அப்படியே சுவைபடச் சொல்லி இருக்கிறீர்கள். இது போல் தான் இங்கேயும் நடக்கும். ஆனால் சின்ன மாற்றம் என்னவென்றால் இங்கே கூளங்களைச் சேர்த்து வைத்திருப்பது நான். எப்போவோ குழந்தைகள் எனக்குக் கொடுத்த பிறந்த நாள் வாழ்த்து அட்டையிலிருந்து, கல்யாணம் ஆனப்போ எழுதிய மாதாந்திரக் கணக்கு நோட்டிலிருந்து, பழைய கடிதங்கள், கோல நோட்டு, நான் படித்த பள்ளி ஆண்டு மலர்னு ஒரு பீரோ நிறைய இருக்கு! அதுக்காகவே அம்பத்தூர் வீட்டில் இருக்கையில் பீரோ வாங்கினார். ஆனால் அந்த பீரோ அந்த வீட்டைப் பார்த்ததே இல்லை. அங்கிருந்து கிளம்பிய பின்னர் வாடகைக்கு இருந்த வீட்டுக்குத் தான் வந்தது. அதன் பின்னர் இங்கே ஶ்ரீரங்கம் வந்து தான் அதைப் பயன்படுத்திக்கிறேன்.
Geetha Sambasivam said...
//தினசரி மற்றும் வாரப் பத்திரிக்கைகளில் இருந்து கத்தரித்து சேமித்தவை. எளிய யோகமுறை, வேப்பிலையின் பயன்கள், குழந்தைகளுக்கு எதை எப்படி சொல்லித் தருவது?, ஆன்மீக உபதேசங்கள், ஏதேதோ கட்டுரைகள், சில கதைகள் ... எல்லாமே உதிரியாய் அடுக்கி இருந்தன.//
இந்த மாதிரி உதிரிகள் ஒரு பெரிய கித்தான் பை முழுவதும் இருந்தது. சிலவற்றை அண்ணாவிடம் கொடுத்தேன். சிலது நாங்கள் ஒவ்வொரு ஊராக மாற்றலில் போகையில் சரியாகப் பாக்கிங் செய்யாமல் தொலைந்து போயின. அப்படித் தொலைந்தவைகளில் சில, பல புத்தகங்களும் உண்டு. அவற்றில் முக்கியமானவை சித்தப்பா எனக்குக் கல்யாணத்தன்று பரிசளித்த, "வாழ்விலே ஒரு முறை" புத்தகம். யாரோ படிக்கவென வாங்கிக் கொண்டு திரும்பத் தரவில்லை. என் பெயர், அவர் பெயரோடு திருமண நாளையும் அதில் குறிப்பிட்டுக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருந்தார் சித்தப்பா! :)
Geetha Sambasivam said...
ம்ம்ம்ம்ம் இதைப் படிக்கும் சிலர் நான் என் அனுபவத்திலிருந்தே எழுதுவதாகச் சொல்லக் கூடும். அல்லது எல்லாவற்றிலும் எனக்கும் அனுபவங்கள் உண்டு என்று சொல்வதாகவும் நினைக்கலாம். ஆனால் தூர்தர்ஷனில் "வாக்லே கி துனியா" தொடரின் முதல் காட்சியைப் பார்த்தவர்களுக்கு இது சாமானியர்கள் அனைவருக்கும் உள்ள பொதுவான ஒரு பிரச்னை/அல்லது பழக்கம் என்பது புரியும். :)))))
திண்டுக்கல் தனபாலன் said...
Check: http://tamilmanam.net/who_voted.php?id=1403179
Geetha Sambasivam said...
//ம்ம்ம்ம்ம் இதைப் படிக்கும் சிலர் நான் என் அனுபவத்திலிருந்தே எழுதுவதாகச் சொல்லக் கூடும். //

"ம்ம்ம்ம், என்னுடைய கருத்தைப் படிக்கும் சிலர் நான் என் அனுபவத்திலிருந்தே எழுதுவதாகச் சொல்லக் கூடும். " என்று படிக்கவும். நான் எழுதி இருப்பது பதிவைக் குறிப்பதாக அமைந்து விட்டது. வருந்துகிறேன். :(
Ajai Sunilkar Joseph said...
கூளம்
அருமையான கதை.
நான் ரசித்து படித்த
கதை இது.....
வாழ்த்துக்கள்...
தொடருங்கள் கூளம் போல்
கதைகளை....
Ajai Sunilkar Joseph said...
கூளம்
அருமையான கதை.
நான் ரசித்து படித்த
கதை இது.....
வாழ்த்துக்கள்...
தொடருங்கள் கூளம் போல்
கதைகளை....
sury Siva said...
இது பேப்பர் ரோஸ்ட் இல்ல.
பேப்பர் ghost.

சுப்பு தாத்தா.
ஜீவி said...
ஆரம்ப அறிமுகத்தில் அமார் வேம்பு சார் பற்றி வாசித்ததும் எண்ணங்கள் தறி கெட்டுத் திரிநதன. இப்படி நகரைச் சுற்றி ஊரைச் சுற்றி தெருவைச் சுற்றி வெள்ளமாய் நீர் சூழும் என்று யார் எதிர்ப்பார்த்தார்கள்?.. மேற்கு மாம்பலம் ஜெயசங்கர் தெரு வேம்பு சாரின் வீடு, அந்த வாசப்பக்கம்-- விஸ்வரூபம் எடுத்தாடும் எல்லா நினைவுகளையும் ஆழ மனசுக்குள் புதைத்துக் கொண்டு கதைக்கு வந்தால்--

இங்கும் நினைவுகளுக்கு சாட்சியாய் இருக்கும் கூளங்கள். அனுபவப்பட்ட வேம்பு சாரின் வழிகாட்டலாய் கிடைத்த, கூளங்களுக்கு நடுவெ குந்துமணியாய் தலைப்பு.. கண்ணுக்குத் தெரிகிற கூளங்களில் படிந்திருக்கும் கண்ணுக்குத்தெரியாத நினைவு படிமங்கள்..

ஹப்பா.. என்ன கதை ஐயா!.. மனுஷனின் மகோன்னதம் எப்படியெல்லாம் அவனைப் போட்டு அலைக்கழிக்கிறது!.. ஒவ்வொரு காகிதத்தைச் சுற்றியும் பின்னிக் கொள்ளும் நினைவுப் பின்னல் அற்புதம்!

செருப்பை மாட்டிக் கொள்ளும் சமயம் ‘அப்பா..’ என்று கீழ்க்குரலில் குழைந்து -- உமாவின் நைச்சியத்தை மறக்க முடியுமா?..

“அம்மா சாரை நல்லா ஒட்டி நில்லுங்கம்மா”.-- அந்தக்கால போட்டோ ஸ்டூடியோ ஜபர்தஸ்துகளைத் தான் மறக்க முடியுமா? ஓவியமாய் நெஞ்சில் புதைந்த நினைவுகளை மீட்டி எடுக்கும் வருடல்களில் தான் எத்தனை சுகம்?.. தொடர்ந்து அம்மாவின் வார்த்தை சாட்டையையும் மறக்காமல்...

‘ஸ்வஸ்திஸ்ரீ நிகழும் பிரஜோத்பத்தி வருஷம் மாசி மாதம்...‘ எவ்வளவு தத்ரூபம்!

அலுவலக மெமோ நிகழ்த்திய வாழ்க்கைச் சரிதத்தின் மறக்கவொண்ணா பக்கக் கிழிசல்கள்..

இத்தனைக்கும் நடுவே ராமபாணப் பாச்சைகளுக்கு பெயர் வைத்தவனை ரசிக்கும் ரசனை உள்ளம்...

''''இருக்கட்டும் என்று ஒதுக்கிக் கொண்டது சில பழைய போட்டோக்களும், குழந்தைகள் கிறுக்கிய சில தாள்களும்,குழந்தைகளின் கல்யாணப்பத்திரிக்கைகளும்,சில புத்தகங்கள் மட்டுமே.'-- யாருக்கும் இவை கூளங்கள் இல்லை என்று சொல்லாமல் சொன்னதின் நடுவில் 'நானும் பத்திரப்படுத்தி வைத்திருக்கும் மகன், மகள், பேரன், பேத்தி கிறுக்கிய காகிதங்கள் நினைவுக்கு வந்து'....

சபேசன் பாத்ரூமுக்குள் நுழைந்தார். சோப்பைக் கையிலெடுத்துக் குழைத்தார். -- இந்த இடத்தில் நினைவுகள் நெஞ்சில் ஓடிய மனக்கிலேசத்தில், கதையின் முடிவு சபேசனின் முடிவாய் இப்படித்தான் இருக்கும் என்று வாசிப்போரின் எதிர்பார்ப்பை மாற்றி எழுதிய எழுத்துக் கோலம்... மோகன்ஜி! கங்கிராட்ஸ்.. இவ்வளவு அருமையாக எழுதுவீர்களா, நீங்கள்?.. தெரியவே தெரியாதே!

'பேப்பர் ரோஸ்ட்'-- இன்னும் காகித ஞாபகம் போன பாடில்லை.. எப்படிப் போகும்?.. அத்தனைக் காகிதச் சுருட்டல்களும் நினைவுகளை தங்களுக்குள் சுருட்டி வைத்திருக்கும் படிமங்கள் தானே!

அதையெல்லாம் கூளங்கள் என்று கொச்சை படுத்தி எப்படிச் சொல்லத் துணிவது?.. ஒழித்து விட்டாலும் மன சிம்மாசனத்தில் என்றென்றும் வீற்றிருக்கும் வரம் பெற்றவை அல்லவா அவை?.. என்று எண்ணங்கள் புரண்டாலும்,

பத்திரிகை பிரசுரத்திற்கேற்பவான தலைப்பு கொடுத்த விக்கிரமன் சார் புன்முறுவலுடன் நிழலாடுகிறார்! எத்தனை அனுபவப்பட்டவர்?.. அவருக்குத் தெரியாததா?..

'கூளங்கள்' கதை ஏற்படுத்திய உணர்வுகள் மறக்கவே மறக்காது!

மோகன்ஜியின் படைப்புலம் வாழ்க! கைநிறைய சுமந்திருக்கும் வாழ்த்துக்களைப் பிடியுங்கள், நண்பரே!
sury Siva said...
//சித்தப்பா எனக்குக் கல்யாணத்தன்று பரிசளித்த, "வாழ்விலே ஒரு முறை" புத்தகம். யாரோ படிக்கவென வாங்கிக் கொண்டு திரும்பத் தரவில்லை. என் பெயர், அவர் பெயரோடு திருமண நாளையும் அதில் குறிப்பிட்டுக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருந்தார் சித்தப்பா! :)//
pustakam vanitha vruththam ,
parahasthe gatham gatham
punaha aagachEthu
Jeernaah, ......., kandhithaha.
पुस्तकम वनिथा व्र्त्थम
परहस्ते गतम गतम
पुनह आग्च्चेतु
झॆर्णा भ्रश्ता खन्दितह।



இந்த வசனம் கேட்டதில்லையோ ?

சுப்பு தாத்தா.
KILLERGEE Devakottai said...
கதை அருமை திரு. மோகன்ஜி அவர்களுக்கு வாழ்த்துகள் தங்களுக்கு நன்றி நண்பரே
தமிழ் மணம் சுற்றுகின்றது மீண்டும் வருவேன்....
Thulasidharan V Thillaiakathu said...
அருமையான கதை! நானும் கூளம் கொஞ்சம் எனது தனிப்பையில் வைத்துக் கொண்டுள்ளேன். வீட்டிலில்லை. வாழ்த்துகள் மோகன்ஜி!!! பகிர்ந்தமைக்கு நன்றி ஸ்ரீராம். அவர் ப்ளாகையும் இணைத்துக் கொண்டோம்...அங்கும் இணைந்தோம்..தொடர..

கீதா: கூளம் ! கதை மிகவும் யதார்த்தமான நிகழ்வைச் சொல்லிச் செல்கின்றது. அருமை.

எங்கள் வீட்டிலும் நான் சேர்த்தவை இருக்கிறது. மகன், கணவர் சேர்த்த புத்தகங்கள் என்று எங்கள் சொத்து இவைதான். அதனால் யாரும் ஒருவரை ஒருவர் சொல்லுவதில்லை கூளம், தூக்கிப் போடு என்று! நானும், மகனும் சொல்லிக் கொள்வது என்னவென்றால்...ம்மா நான் சம்பாதிச்சு எதிர்காலத்துல இந்தப் ஃப்ளாடை வித்துட்டு, இதை விட கொஞ்சம் பெரிசா ஃப்ளாட்/வீடு வாங்குவோம்/கட்டுவோம்...வேற எது இருக்குதோ இல்லையோ...ஆடம்பரமே வேண்டாம்.... ஒரு பெரிய ரூம் நம்ம சொத்துக்கு, அமைதியா உக்காந்து வாசிக்க, எழுத..." என்று சொல்லுவதுண்டு.

தமிழ்மணம் உலகம் சுற்றும் வாலிபனாகியிருக்கிறது. சுத்தி முடிச்சு வரட்டும்...அடடா இன்டெர்னர் எரர் வருதே..ஹும்...
Thulasidharan V Thillaiakathu said...
சுத்திக்கிடுருந்த ஓட்டுப் பெட்டியும் காணாமப் போயிருச்சே...என்ன மர்மமோ..பல தளத்துலயும் இப்ப்படித்தான் ஆகுது..

கீதா
ஞா. கலையரசி said...
"இவற்றையெல்லாம் ஒரு ஆயுளுக்கும் சேர்த்து, ஏதோ ஒரு சமயம் உபயோகிக்கப் போகிறோம் என்றுதான் எல்லோருமே எல்லாவற்றையும் சேமிக்கிறார்கள். எதிர்ப்பார்த்த அந்தக் காலம் வருவதற்கு முன்னரே எல்லாமும் முடிந்து விடுகிறது.."
மிகவும் உண்மை. ஒவ்வொரு காகிதமும் அவர் நினைவுகளோடு பின்னிப்பிணைந்திருந்த விதத்தை அழகான கதையாக்கியிருக்கிறார் ஆசிரியர். ஏதோ ஒரு வேகத்தில் காகிதக் கூளத்தை அப்புறப்படுத்த அவர் வெளி மனது நினைத்தாலும், அவை அவரது உள்ளுணர்வுடன், ஆன்மாவுடன் இரண்டறக் கலந்திருக்கின்றன என்பதை அற்புதமாய்ச் சொல்கிறது பேப்பர் ரோஸ்ட் என்ற வார்த்தைகள்! ஆசிரியருக்குப் பாராட்டுக்கள்! கதையை வாசிக்கத் தந்த எங்கள் பிளாக்குக்கு நன்றி!
கரந்தை ஜெயக்குமார் said...
அருமையான கதை நண்பரே
ரசித்தேன்
தம சுற்றிக் கொண்டே இருக்கிறது
Ramani S said...
கேட்டு வாங்கிப் போடவேண்டிய
அருமையான கதை
என் குப்பை கூளங்களையும்
மனைவியின் தொடர் நச்சரிப்பையும்
ஞாபகப்படுத்திப் போகுது...
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
Thenammai Lakshmanan said...
அருமையான கதை. வாழ்த்துக்கள் எங்கள் ப்லாக் & மோகன்ஜி
‘தளிர்’ சுரேஷ் said...
மிகவும அருமையான கதை! ஒவ்வொருவர் வாழ்விலும் இப்படி நிறைய கூளங்கள் நிறைந்திருக்கும்! நினைவுக்கு கொண்டுவரவைத்து விட்டது கதை! பாராட்டுக்கள்!
வல்லிசிம்ஹன் said...
எத்தனை அருமையான கதை. ஒவ்வொரு அப்பா அம்மா எல்லோருக்கும் கடந்த வாழ்க்கையை நினைவுக்குக் கொண்டுவரும். சபேசனை உயிரோடு ,
ரோஸ்ட் தோசை சாப்பிட அனுப்பியதற்கு மிக நன்றி.
என் வீட்டுக்காரருக்கும் இது போல ஒரு மெமோ 2000 ரூபாய்க்கு வந்தது. நண்பன் ஒருவன் வண்டியை ரிப்பேர் செய்து எடுத்துக்கொண்டு போய்விட்டான். கொடுக்க வேண்டிய பில் அமவுண்ட் தீர்க்கவில்லை. மாசக் கடைசியில் தெரிய வந்து மேலிடம் வரை போய் விட்டது.

எப்படியோ கட்டிவிட்டோம். இந்தக் குறை அவர் மனதைவிட்டுப் போகவே இல்லை.
உங்கள் வரிகளைப் படிக்கும் போது, என் மனம் துடிக்க ஆரம்பித்து விட்டது.

எத்தனையோ தளங்களை அருமையாகத் தொட்டு அற்புதமாக முடித்துவிட்டீர்கள்.
அன்பு ஸ்ரீராமுக்கும் உங்களுக்கும் நன்றி.
sury Siva said...
//கூளத்தை அப்புறப்படுத்த அவர் வெளி மனது நினைத்தாலும், அவை அவரது உள்ளுணர்வுடன், ஆன்மாவுடன் இரண்டறக் கலந்திருக்கின்றன//

கூளம் என்று இருந்ததெல்லாம்
கலக்கி விட்டால் காண்பதென்ன !!
கடந்த கால காயங்கள் சில
கற்பனையில் மிதந்த நேரங்கள் சில.
அற்பங்கள் சில எனினும்
சிற்பங்களும் பல.

கூடலும் ஊடலும்
வாடலும் தேடலும்
பாடலும் சாடலும்
பவனி வரும்
பள்ளியறை அன்றோ கூளம் !!

கூளம் எனது சரித்திரம். என்றுமதை
வைத்திருப்பேன் பத்திரம்.

சுப்பு தாத்தா.
Umesh Srinivasan said...
அருமையான கதை, இல்லை வாழ்க்கை அனுபவம். அடுத்தமுறை ஊருக்குப் போகையில் பரணில் உள்ள கூளங்களை அகற்ற வேண்டும்.
Bagawanjee KA said...
கூளம் ,எல்லோர் வீட்டிலும் உள்ளது ,நீங்காத நினைவுகளை சுகமாய் தருகிறது !
வலிப்போக்கன் - said...
கதை அருமை.......
வலிப்போக்கன் - said...
கதை அருமை.......
மோகன்ஜி said...
வாழ்த்துக்கு நன்றி தனபாலன்!
மோகன்ஜி said...
நன்றி வைகோ சார்! உங்கள் பதிவையும் உடனடியாய்ப் பார்க்கிறேன்
மோகன்ஜி said...
நன்றி உமையாள் காயத்ரி மேடம்!
மோகன்ஜி said...
கீதா சாம்பசிவம் மேடம்! உங்கள் சமாசாரமும் சுவாரஸ்யமாக இருக்கிறது. நேர மேலாண்மை குறித்த வகுப்புகளில், நாங்கள் ‘clutter management’ என்பதைக் குறித்தும் சொல்வோம்.

அநாவசியமான காகிதங்களை உடனுக்குடன் நீக்குதல், தேவையானவற்றை சரியாக பைல் செய்து பாதுகாத்தல், தேவைப்பட்ட காகிதத்தை அல்லது கோப்பினை தேடிக்கொண்டிராமல், உடனடியாக எடுக்கும்வகையில் முறையாக சேமித்து அடுக்குதல் என்பவை குறித்து விவாதிப்போம். இப்படி முறையாக காகிதங்களைக் கையாளாமல், குப்பலாக குவித்துக் கொண்டு அவசரத்தில் தேடுகையில் ஏற்படுவது நேர விரயமும் தேவையற்ற டென்ஷனும் தான்.

எது தேவையான காகிதம், எது தேவையற்றது என்பதை முடிவு செய்வதில் தான் இருக்கிறது சிக்கலே!. அலுவலகத்துக் காகிதங்களில் பெரும்பாலும் இந்த நிர்வகிப்பினைக் கொண்டுவந்து விடலாம். சொந்தக் காகிதங்களில் அது சற்று சிரமம். என் தாத்தா எழுதிய கடிதம் எனக்கு பொக்கிஷமாயும், என் மனைவிக்கு குப்பையாகவும் தோன்றலாம்.!
மோகன்ஜி said...
ரசித்ததிற்கு நன்றி அனில் ஜோசப் சார்! ‘வானவில் மனிதனு’க்கு நேரம் கிடைக்கும் போது வாருங்கள். என் பல படைப்புகள் அங்குள்ளன
மோகன்ஜி said...
சுப்பு தாத்தா!
//இது பேப்பர் ரோஸ்ட் இல்ல.
பேப்பர் ghost.//
மிக கச்சிதமான கருத்து. அலைபேசியில் நீங்கள் தந்த விளக்கமும், பாராட்டும் என்னை மிக கௌரவப் படுத்தியிருக்கின்றது. உங்கள் எதிர்பார்ப்புகளை பொய்யாக்காமல் இன்னமும் எழுத முயல்வேன் !
மோகன்ஜி said...
ப்ரிய ஜி.வி சார்! ‘வாசிக்கும் கதையினுள் வாழ்தல்’ என்று சொல்வார்கள்.
படைப்பாளி காட்சிப்படுத்த முயலும் வாழ்க்கைத் தருணத்தையும் ,சம்பவக் கோர்வையையும் கதையைப் படிக்கும் கணத்தில் ஒரு தேர்ந்தவாசகன் தனதாக்கிக் கொண்டுவிடுவார். தன் மனோலயப்படி அதில் வாழ்ந்து, தன் அனுபவத்தின் பகுதியாகவே அந்தக் கதையை உள்வாங்குதல் உயரிய வாசிப்பு.
விக்கிரமன் சாரை தனிப்பட்ட முறையில் நீங்களும் அறிந்திருந்ததினால் அவர் செய்த கதைத்தலைப்பு மாற்றத்தையும் உங்களால் கணிக்க முடிந்தது.
கதையினை கூர்ந்து வாசித்து கருத்துரையில் அதை அசைபோட்டிருகிறீர்கள். உங்கள் பாராட்டை தலைதாழ்த்தி ஏற்றுக் கொள்கிறேன். வானவில்லுக்கு மறுபடியும் வாருங்கள்...மிக்க நன்றி ஜீவி சார்! 
மோகன்ஜி said...
வாழ்த்துக்கு நன்றி கில்லர்ஜி!
மோகன்ஜி said...
துளசிதரன் தில்லைக்காத்து,கீதா மேடம் ,
உங்களுக்கு கதை பிடித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தொடர்பில் இருப்போம்
மோகன்ஜி said...
வாங்க கலையரசி மேடம்! உங்களைப் போன்ற நல்ல வாசகர்களை எனக்கு அறிமுகம் செய்த எங்கள் ப்ளாகுக்கு என் அன்பும் நன்றியும்! உங்களுக்கும் தான்!
மோகன்ஜி said...
மிக்க நன்றி கரந்தையாரே!
மோகன்ஜி said...
ரமணி சார்! வாசிக்கபடாத,அல்லது தேவையற்ற காகிதங்கள் அதிகம் வீட்டில் அடைந்திருந்தால் நேர்மறை சக்தி (positive energy) வீட்டினுள் குறைந்து போய்விடும் என்று சீன ஃபென்ஸுய் சொல்லுதாம்! இந்த ஞாயிற்றுக் கிழமை அடைப்பாசாரத்தில் தேவையில்லாததை ஒழிச்சு கட்டுங்களேன். ஹெல்புக்கு வேணா வரவா?!
மோகன்ஜி said...
நன்றி தேனம்மை! நீங்களும் ஹைதராபாதில் தானா இருக்கிறீர்கள்?
மோகன்ஜி said...
மிக்க நன்றி தளிர் சுரேஷ்!
மோகன்ஜி said...
வல்லி சிம்ஹன் மேடம்! நலம் தானா?
பாராட்டுகளுக்கு நன்றி! இந்தக் கதையின்மூலம், சில நண்பர்களின் வடுக்களின் ரணங்களை நெருடியிருக்கிறேன் என்று தெரிகிறது. மன்னித்துக் கொள்ளுங்கள். கதையின் சம்பவங்கள் நமக்கு நேர்ந்ததை தொட்டுச் செல்லும் போது ஏற்படும் வலியை நானறிவேன். அந்த ஆயிரம் ரூபாய் நினைவைக்கூட, சபேசன் போல் சுக்குநூறாய்க் கிழித்து ஊதித்தள்ளுங்கள்! 
மோகன்ஜி said...
அன்பு சுப்புதாத்தா!,
உங்கள் கவிதைபோலும் கருத்து ரசிப்புக்குரியது.
//கூளம் எனது சரித்திரம். என்றுமதை
வைத்திருப்பேன் பத்திரம்//
தெரிந்தோ தெரியாமலோ எனக்கொரு பழக்கம் இருந்ததுண்டு. இன்னமும் இருக்கிறது கூட... மனவாதை தரும் சம்பவங்களையும், சில இழப்புக்களையும், வலிகளையும் துக்கங்களையும் எழுத்தில் ஒளித்துவைத்து விடுவேன். கவிதையிலோ கதையிலோ பூடகமாய் பொதித்து என்னை மீட்டுக் கொள்ள முயல்வேன். ஆறுதலான ஒரு முயற்சி. நீரினில் மூழ்கி நினைப்பொழிப்பது போல், படைப்பினில் முங்கித் துடைத்து விடுவேன். அவை பெரும்பாலும் பிறர் படிக்க வெளிவருவதில்லை. காட்டினில் காய்ந்த வலிநிலா!
எதற்கு இதை சொன்னேன் என்றால், கூளத்தை பத்திரப்படுத்த வேண்டாம் நீங்கள்... உங்கள் வயதும் அனுபவமும், பரந்த வாசிப்பும் எல்லோருக்கும் பயன்படும் வகையில் பதிவிட்டபடிஇருங்கள். இது என் வேண்டுகோள்... என்னை குரு என்று ஒருமுறை சொல்லியிருக்கிறீர்கள்... அதன் படி இது என் கட்டளை!! 
மோகன்ஜி said...
உமேஷ் ஸ்ரீனிவாசன்!
ரசனைக்கு நன்றி! கூளஒழிப்புக்கு என் நல்வாழ்த்துக்கள் !
மோகன்ஜி said...
நன்றி பகவான்ஜி !
மோகன்ஜி said...
நன்றி வலிப்போக்கன்!
Ranjani Narayanan said...
என்ன அதிசயம்! நானும் இரண்டு நாட்கள் முன்புதான் நான் சேர்த்து வைத்திருந்த கூளங்களை ஒழித்தேன். ஒவ்வொருமுறையும் உங்கள் கதாநாயகனைப் போலவே ஒவ்வொரு காகிதத்தையும் படித்து பழைய நினைவுகளில் மூழ்கி கரைந்து, நைந்து....இந்த முறை சில கூளங்களைப் பிரிக்கவேயில்லை! அப்படியே கிழித்து எறிந்துவிட்டேன்.
கதை மிகவும் தத்ரூபமாக காட்சி காட்சியாகக் கண்ணில் வந்து போகிறது.
எல்லோரும் அவரவர் கூளங்களை நினைவிற்குக் கொண்டு வந்திருக்கிறோம். இதுவே கதையின் மிகப் பெரிய பாதிப்பு. பாராட்டுக்கள், மோகன்ஜி!
மோகன்ஜி said...
மிக நன்றாக சொல்லியிருக்கிறீர்கள் ரஞ்சனி மேடம்... ஆனாலும் எல்லாவற்றையும் களைந்து விட இயலாது. காகிதத்தை கிழிக்க யத்தனிக்கும் போது மனசும் சேர்ந்து கிழிபடும் எனத் தோன்றினால் அந்தப் காகிதம் இருந்துவிட்டுத்தான் போகட்டுமே!
G.M Balasubramaniam said...
சில பழைய காகிதங்களை கூளம் என்று ஒதுக்க முடிவதில்லை. சில நேரங்களில் அவற்றில் ஆழ்ந்திருப்பதே மீண்டும் அந்த நினைவுகளில் வாழ்வது போலிருக்கும் அது தவிர இந்தக் கூளங்களுக்கு நம் பரணில் என்ன வேலை?எனக்கு இந்தமாதிரிக் கூளங்க்ல்சளிருந்து எடுத்து எழுத விஷயங்கள் கிடைக்கும் நாம் இருக்கும் வரைதான் இவை பொக்கிஷம் போய் விட்டால் குப்பைகளே.
வல்லிசிம்ஹன் said...
மன்னிப்பு எல்லாம் பெரிய வார்த்தை மோகன் ஜி.
பல நாள் உறங்கிக் கிடந்த ஆதங்கத்தை இப்பொழுது எழுதி விட்டேன்.
கழித்துவிட்ட திருப்தி. எந்தக் கம்பெனிக்காக எங்கள் குடும்ப நேரங்களை
தியாகம் செய்தோமோ அதிலிருந்து விடுபட ஒரு தூண்டு கோலாக
இருந்த நிகழ்ச்சி. உங்களுக்குத் தான் நான் நன்றி சொல்லணும்.
வாழ்க வளமுடன் ஜி.
மோகன்ஜி said...
நல்ல கருத்து ஜிஎம்பி அவர்களே!
மனோ சாமிநாதன் said...
முதலில் இந்த அருமையான சிறுகதையினை இங்கே பதிவர்களுக்குப் படிக்கத்தந்ததற்கு ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றி!

எல்லோரது வாழ்க்கையிலும், அதிலும் மென்மையான, சிறிது கலைநயம் கொண்டவர்களின் வாழ்க்கையில் இந்தக் கூளங்கள், மனசிலும் சரி, சேமிப்பிலும் சரி, பொக்கிஷங்களாய் நிறைந்திருக்கும்! அவற்றிற்கு விலை மதிப்பேது? அவற்றைப்பற்றிய மலரும் நினைவுகளுக்கு விலை மதிப்பேது?

மோகன்ஜி! உங்களின் சில சிறுகதைகள் உங்களின் பழைய தளத்தில் படித்து ஏற்கனவே மனம் நெகிழ்ந்திருக்கிறேன்! ஆனால் இத்தனை அழகாய், அதுவும் இருபத்தைந்து வருடங்களுக்கு முன் ஒரு முதியவரின் மன நிலையை, நெகிழ்வை, ஆற்றாமையை, தவிப்பை எப்படி எழுதியிருக்கிறீர்கள்?

//‘என் அருமை மகளே ! நீயேன் பெரியவளானாய்? ஏன் என்னை விட்டு எங்கோ பிறந்த ஒருவனுக்காய் நாடு விட்டு நாடு போய் சமைத்துப் போட்டு,, குழந்தைகள் பெற்றுக் கொண்டு.. இங்கே வரும் சமயமெல்லாம் அவர்களைப் பற்றியே ஓயாமல் பேசிக்கொண்டு..... இந்தக் கிழவனுக்காய் உனக்கு சற்றேனும் நேரமிருக்கிறதா உமா?’// ஒவ்வொரு தகப்பனும் ஏதேனும் ஒரு சமயத்தில் ஏங்கிப் புலம்பும் வார்த்தைகள் அல்லவா இவை?

மனைவிக்கு இளம் வயதில் மன ஆறுதலைக் கொடுக்க முடியவில்லையே என்ற கழிவிரக்கமும் இனியாவது அவளுக்கு அனுசரணையாக இருக்க வேண்டும் என்ற தாபமும்...இந்தக் கதையில் நீங்கள் வாழ்ந்திருக்கிறீர்கள் மோகன்ஜி!

இளம் வயதில் இது மாதிரி பொக்கிஷங்களை சேகரிக்கும் துடிப்பும், நடுத்தர வயதில் தோன்றும் அலுப்பும், முதிர்ந்த வயதில் பொக்கிஷங்கள் கூளங்களாய் மாறுவதும் எனக்கும் ஏற்பட்டிருக்கின்றன! எல்லோருடைய மன நிலையையும் ஒரு அழகிய கவிதையாய் சொல்லி கலங்க வைத்து விட்டீர்கள்!!


மோகன்ஜி said...
வல்லிசிம்ஹன் மேடம்,
வேதனைகளை சுமந்தபடி வாழ்வதில் அர்த்தமில்லை. விதியின் குரூரப் புன்னகை நம் மீது விழும் போது அதை நோக்கி பதில் புன்னகை செய்யத் தெரிந்தவர்களாய் நாம் இருக்கலாகாதா? ஆன்மீகமும் இலக்கியமும் சொல்லும் பல பாடங்களில் முக்கியமானது பிரச்னைகளின் நிலையாமை தான் ! அவற்றின் கடந்து போக வல்ல தாற்காலிகம் தான் !
மோகன்ஜி said...
மனோ மேடம் !
மனநெகிழ்ச்சியுடன் நீங்கள் வாழ்த்தியதிற்கு என் நன்றி ! ஶ்ரீராம் போல் தார்க்கோல் போடும் தம்பியிருந்தால், இன்னும் நிறைய கதைகள் என் மாடத்திலிருந்து நகரும் என்று தோன்றுகிறது மேடம் !
நீங்கள் ரசித்த இடங்களைப் பற்றிய உங்கள் வரிகள் அழகானவை.
அவசியம் இன்னும் கதைகள் பல 'வானவில் மனிதன்' தளத்தில் வரும்.
ஶ்ரீராம் மற்றும் நண்பரகளுக்கு சம்மதமெனில், 'எங்கள் blog'லேயே கூட...
ரிஷபன் said...
இம்மாதிரி ஒழித்துத் தள்ள முனைந்து மனம் வராமல் அதில் ஒரு பகுதியை இன்னமும் காப்பாற்றிக் கொண்டிருக்கிற மனசுதான் இந்த உயிரையும் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது.. அருமையான கதையோட்டம்
ரிஷபன் said...
இம்மாதிரி ஒழித்துத் தள்ள முனைந்து மனம் வராமல் அதில் ஒரு பகுதியை இன்னமும் காப்பாற்றிக் கொண்டிருக்கிற மனசுதான் இந்த உயிரையும் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது.. அருமையான கதையோட்டம்
Angelin said...
ராமபாண’ பாச்சைகள்// ஹாஹா நாங்க தெறி பாச்சா/வில்லு பாச்சா என்று சொல்வோம் ராமபாண’ பாச்சைகள் தான் செம பொருத்தம் ..கூளம் சேர்த்துவிடுவது சுலபம் அதை டிஸ்கார்ட் செய்யும்போது எவ்ளோ கஷ்டம் தெரியுமா :) அதுவும் என் வேலையே கூளம் சேர்ப்பதுதான் .. என் மைத்துனர் அவரது அம்மா எழுதிய கடிதங்களை இன்னும் வைதிருக்கர் ..என் கணவரும் ஒரு மூட்டை வைச்சிருக்கார் .
என் பொண்ணு முதன்முதலா ஸ்கூலில் கிறுக்கின கிறுக்கல் எல்லாம் சேர்த்திட்டு வரேன் :) என்னை பொறுத்தவரை பல கூளங்கள் பொக்கிஷங்கள் பகிர்வுக்கு நன்றி எங்கள் ப்ளாக்
மோகன்ஜி said...
அன்பு ரிஷபன் சார்!
// இன்னமும் காப்பாற்றிக் கொண்டிருக்கிற மனசுதான் இந்த உயிரையும் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது//
இந்த சம்பந்தம் தான் எவ்வளவு நிஜம்?! அழுத்தமான கருத்துக்கு நன்றி சகோதரா!
மோகன்ஜி said...
தெறி பாச்சா, வில்லுபாச்சா.... புது வார்த்தைகளுக்கும்,கருத்துக்கும் எங்கள் பிளாக் சார்பில் நன்றி ஏஞ்சலின் !
Story has nice flow.
ஹேமா (HVL) said...
Story has nice flow.
மோகன்ஜி said...
நன்றி ஹேமா !
Anandaraja Vijayaraghavan said...
கதையும் அதை முடித்த விதமும் அருமை.
ஸ்ரீராம். said...
நன்றி சகோதரி உமையாள் காயத்ரி.
ஸ்ரீராம். said...
நன்றி கூறிய வைகோஜி அவர்களுக்கும் நன்றிகள்!
ஸ்ரீராம். said...
வரிசையாய்ப் பின்னூட்டமிட்டு ரசித்த கீதா மேடம்.. நன்றி.
ஸ்ரீராம். said...
இரண்டு முறை அதையே சொல்லி அருமையாய் ரசித்திருக்கும் அஜய் சுனில்கர் ஜோசப்... நன்றி. :)))
ஸ்ரீராம். said...
மீள் வருகைகளுக்கும் சேர்த்தே நன்றி சுப்பு தாத்தா.
ஸ்ரீராம். said...
நன்றி ஜீவி ஸார்.
ஸ்ரீராம். said...
நன்றி கில்லர்ஜி.
ஸ்ரீராம். said...
நன்றி துளசிதரன் ஜி, கீதா.
ஸ்ரீராம். said...
நன்றி கலையரசி மேடம்.
ஸ்ரீராம். said...
நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.
ஸ்ரீராம். said...
நன்றி ரமணி ஸார்.
ஸ்ரீராம். said...
நன்றி தேனம்மை லக்ஷ்மணன்.
ஸ்ரீராம். said...
நன்றி 'தளிர்' சுரேஷ்.
ஸ்ரீராம். said...
நன்றி வல்லிமா.
ஸ்ரீராம். said...
நன்றி உமேஷ் ஸ்ரீநிவாசன்.
ஸ்ரீராம். said...
நன்றி பகவான்ஜி.
ஸ்ரீராம். said...
நன்றி நண்பர் வலிப்போக்கன்.
ஸ்ரீராம். said...
நன்றி ரஞ்சனி மேடம்.
ஸ்ரீராம். said...
நன்றி ஜி எம் பி ஸார்.
ஸ்ரீராம். said...
நன்றி மனோ சாமிநாதன் மேடம்.
ஸ்ரீராம். said...
அடடே... அபூர்வ வருகை. நன்றி ரிஷபன் ஸார். மோகன்ஜிக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். பிரபலங்களை எல்லாம் வரவழைத்திருக்கிறார் அவர்.
ஸ்ரீராம். said...
நன்றி ஏஞ்சலின்.
ஸ்ரீராம். said...
நன்றி ஹேமா (HVL)
ஸ்ரீராம். said...
நன்றி ஆவி.
ஸ்ரீராம். said...
அனைவருக்கும், அன்புடனும், அக்கறையுடனும், சுவாரஸ்யமாகவும் பதிலளித்த அன்பு அண்ணன் மோகன் ஜி அவர்களுக்கும் எங்கள் நன்றிகள். மறுபடியும் இன்னொரு வாய்ப்பு கூட எங்களுக்கு இதே போல வரவேண்டும்.
வை.கோபாலகிருஷ்ணன் said...
அன்புள்ள ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் ! வணக்கம்.

’மோகன்ஜி’யும் தாங்களுமாகச் சேர்ந்து செய்துள்ள சங்கல்ப்பம் இன்னும் சற்று நேரத்தில் நிறைவேறப்போகிறது. அதற்கு என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள். :)
ஸ்ரீராம். said...
ஆஹா.... வைகோ ஸார்... என்னவென்று புரியவில்லையே.. என் செய்வேன்? என் செய்வேன்? சீக்கிரம் புரிய வையுங்கள். நன்றி மீள் மீள் மீள் மீள் வருகைக்கு!
வை.கோபாலகிருஷ்ணன் said...
என்னிடம் ஓர் கதையை கேட்டு வாங்கிப்போட்டபோது அது வெறும் 12 மணி நேரங்கள் மட்டுமே உங்கள் தளத்தில் மேலாகக் காட்சியளிக்கச் செய்திருந்தீர்கள். அதை செவ்வாய்க்கிழமை தாங்கள் வெளியிட்டதிலேயே மிகவும் தாமதம். மதியம் சுமார் 2 மணி இருக்கும்.

மறுநாள் புதன்கிழமை காலை வேறு பதிவினை வெளியிட்டு அதை பின்னுக்குத் தள்ளிவிட்டீர்கள்.

அதற்குள்ளாகவே அதில் என் மறுமொழிகள் ஏதும் அதிகம் இல்லாமலேயே 88 பின்னூட்டங்கள் கிடைத்திருந்தன என்பது தனிக்கதை.

நம் மோகன்ஜிக்கு மட்டும் ஸ்பெஷல் சலுகையாக செவ்வாய், புதன், வியாழன் ஆகிய மூன்று முழு நாட்களா ? :)

>>>>>
வை.கோபாலகிருஷ்ணன் said...
100 க்கு 100 நான் மட்டுமே.

பின்னூட்ட எண்ணிக்கையில் இது 100 :)
மோகன்ஜி said...
This comment has been removed by the author.
கோமதி அரசு said...
நான் போட்ட இரண்டு பின்னூட்டங்கள் எங்கே போச்சு?
மோகன்ஜி said...

ஶ்ரீராம் மற்றும் எங்கள் பிளாக் நேயர்களுக்கும் நான் தான் நன்றி சொல்ல வேண்டும். எந்தப் படைப்பும், படைப்பாளியின் நோக்கையும் உணர்வெழுச்சியையும் படிப்பவர்க்கு கடத்த முடிந்தால் வெற்றி பெற்றதாகக் கொள்ளலாம். இவ்வளவு வருடங்களுக்கு பின்னரும் இது ரசிக்கப்படுவது என் சொந்த சுகம். எங்கள் பிளாகும் வானவில் மனிதனும் அவசியம் அடிக்கடி கைகோர்க்கும் உங்கள் அன்பிருந்தால்....மீண்டும் நன்றி!!
ஸ்ரீராம். said...
ஆஹா... வைகோ ஸார்... இப்படி ஒரு குற்றச்சாட்டா என் மேல்? சாதாரணமாக செவ்வாய் 'கேட்டு வாங்கிப் போடும் கதை' அன்று மதியம் 1 மணிக்கு வெளியிடுவேன். அடுத்தநாள் பதிவை புதன் மாலை 7 மணிக்கு மேல் வெளியிடுவேன். கிட்டத்தட்ட ஒன்றரை நாள் கணக்கு. அப்படித்தான் உங்கள் பதிவுக்கும் வெளியிட்டேன். ஆனால் இந்த வாரம் வேலைப்பளுவாலும் எழுத ஒன்றும் கிடைக்காமல் நான் தவித்தது எனக்குத்த்தான் தெரியும். எனவே நேற்று மாலை ஒன்றும் வெளியிட முடியவில்லை. இன்னமும் கூட உங்கள் கதையை தினம் இரண்டு மூன்று பேர்கள் படித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

நீங்கள் சொன்ன 'சங்கல்பம்' இந்த 100 தானா?
ஸ்ரீராம். said...
உங்கள் பின்னூட்டத்தை வானவில் மனிதன் தளத்தில் பார்த்தேன் கோமதி அரசு மேடம். இப்போதுதான் இங்கு இதைப் பார்க்கிறேன்.
ஸ்ரீராம். said...
நன்றி மோகன்ஜி. படிக்கப்படும் படைப்பில் தன்னுடைய அனுபவத்தை ஒரு வாசகன் பார்ப்பானே ஆனால் அது அவன் இதயத்தில் நுழைந்து விடும் என்பதில் ஐயமில்லை.
கோமதி அரசு said...
அருமையான கதை .

//மாமாவுக்கு ஒரு கல்யாண மண்டப ஹால் கூட பத்தாதும்மா!’ //

மருமகள் சொல்வது போல் எங்கள் வீட்டுக்கு வருபவர்கள் சொல்வது உங்களுக்கு இந்த வீடு பத்தாது என்பது தான்.


நாங்களும் வீட்டில் கூளங்களும், புத்தகங்களும் நிறைய சேமித்து வைத்து இருக்கிறோம்.

35 வருடங்காளாய் ஊர் மாற்றம் இல்லாமல் இருந்து விட்டதால் சேமித்தவை கஷ்டமாய் தெரியவில்லை, இந்த முறை வீடு, ஊர் மாற்றத்தால் புத்தக சேமிப்பு மற்றும் பொருட்கள் சேமிப்பு மிகவும் அதிகமோ என்ற எண்ணம் வந்து போனது. இனி எதுவும் புதிதாக வாங்க கூடாது என்ற எண்ணமும் வந்து இருக்கிறது
(எத்த்னை நாளோ இந்த வைராக்கியம்)


//தூர்தர்ஷனில் "வாக்லே கி துனியா" தொடரின் முதல் காட்சியைப் பார்த்தவர்களுக்கு இது சாமானியர்கள் அனைவருக்கும் உள்ள பொதுவான ஒரு பிரச்னை/அல்லது பழக்கம் என்பது புரியும். :)))))//


கீதா சொல்வது போல் அனைவரும் எதிர் கொண்ட பிரச்சினை தான்.


அந்த தொடரில் சாமான்கள் ஒழிப்பதும் பின் ஆள் ஆளுக்கு அவை வேண்டும் என்று மீண்டும் எடுத்து உள்ளே வைப்பதும் நடக்கும்.

அந்த கதையில் வருவது போல் எங்கள் வீடு சுத்தம் செய்யும் போது , சுண்ணாம்பு அடிக்கும் போது வேண்டாதவை என்று கழிப்புது போல் ஓரத்தில் வைக்கப்படும் பொருட்கள், புத்தகங்கள் அப்புறம் அதுக்கு தேவைப்படும், இதுக்கு தேவைபடும் என்று ஒன்று ஒன்றாய் மீண்டும் பழைய இடத்திற்கு போய் விடும்.

முன்பு அம்மா எங்கள் பழைய நோட்டு புத்தக பேப்பர்களை ஊறவைத்து அரைத்து பெரிய பெரிய கூடையாக செய்து விடுவார்கள். இப்போது அவையும் குப்பைகள் ஆகிவிட்டது.

பொக்கிஷங்கள் என்று இப்போது வலைத்தளத்தில் போட்டுக் கொள்ளலாம்.
கோமதி அரசு said...
பழையன கழிதலும்’ என்றோ மாற்றிக்கொள்வதாயும் சொன்னார். ‘கூளம்’ நல்லா இருக்கு சார்! என்றேன்//


பழையன் கழிதலும் தலைப்பை விட கூளம் நன்றாக இருக்கிறது..


குப்பை , கூளங்கள் என்பதை சிலவற்றை நாம் பத்திரமடுத்தவே முயல்வோம். பழையன் கழிதல் இல்லை அங்கு.

முன்பு கடிதங்கள் நிறைய இருக்கும் ஒரு கம்பியில் குத்தி வைத்து இருப்போம் அவற்றை ஒரு சமயம் நிறைய சேர்ந்து விட்டது என்று கிழித்து விட்டு அப்பா, அம்மா, அக்கா, அண்னன் இறந்தவுடன் அவர்கள் கடிதங்கள் இருந்து இருக்கலாம் அவர்கள் நினைவுகளை சுமந்தபடி அவற்றை கிழித்து போட்டதற்கு வருந்தி கொண்டே இருந்தேன். இன்னும் கொஞ்சம் இருப்பதை பத்திரபடுத்தி வைத்து இருக்கிறேன். என் காலத்திற்கு பின் அவை மற்றவர்களுக்கு குப்பை கூளங்கள்தான் அவை.
கதை மனதை பழைய நினைவுகளுக்கு அழைத்து சென்று விட்டது.
உங்களுக்கும்,எங்கள்பிளாக்’ ஸ்ரீராம் அவர்களுக்கும் நன்றி. நிறைய எழுதுங்கள்.
வெங்கட் நாகராஜ் said...
அருமையான கதை. நேற்று அதிகாலையிலேயே முழிப்பு வந்து விட்டது. கணினியில் பழுது என்பதால் மருத்துவரிடம் சென்றிருந்தது.... தொலைக்காட்சி பார்த்து தொல்லை பட விருப்பமில்லை. பழைய காகிதங்களைப் புரட்டிக் கொண்டிருந்தபோது, “இதையெல்லாம் வச்சு என்னத்த பண்ணப் போறீங்க!” என ஒரு குரல் கேட்ட மாதிரி இருக்க, கிழித்துத் தள்ளினேன்.... ஒரு பை நிரம்பியது! :)
பரிவை சே.குமார் said...
அருமையான கதை...
வாழ்த்துக்கள்.
ஜீவி said...
விரைவில் 'வானவில் மனிதனி'ல் சந்திக்கலாம், மோகன்ஜி! என்ன தாமதமானாலும் சகித்துக் கொள்ள வேண்டுகிறேன்.
அப்பாதுரை said...
ஜீவி அவர்களின் பின்னூட்டம் அற்புதம்.
ஸ்ரீராம். said...
நன்றி கோமதி அரசு மேடம்.
ஸ்ரீராம். said...
நன்றி வெங்கட். எல்லோருக்கும் இருக்கும் அனுபவம்!
ஸ்ரீராம். said...
நன்றி குமார்.
ஸ்ரீராம். said...
நன்றி ஜீவி ஸார். எங்களுக்குப் புரியவில்லை என்றாலும் மோகன்ஜிக்குப் புரிந்திருக்கும்!
ஸ்ரீராம். said...
ஆம். வழக்கம் போல! நன்றி அப்பாதுரை.
மோகன்ஜி said...
கோமதி அரசு மேடம்,
//அம்மா எங்கள் பழைய நோட்டு புத்தக பேப்பர்களை ஊறவைத்து அரைத்து பெரிய பெரிய கூடையாக செய்து விடுவார்கள். இப்போது அவையும் குப்பைகள் ஆகிவிட்டது//.

ஆச்சர்யமாக,எனது பழையகதை ஒன்றில் ஒரு மருமகள் இந்த பேப்பர் கூடை செய்யும் ஒரு இடம் வரும்... தேடிப் பார்க்கிறேன். ஒரு நடுத்தர குடும்பத்தின் மருமகளுடைய வாழ்க்கையின் சில சம்பவங்கள். வலிஎற்றுகிறேன் சில நாட்களில்.. என் விவரங்கள் சரியா என்று நீங்கள் தான் அப்போது சொல்ல வேண்டும்
மோகன்ஜி said...
கோமதி அரசு மேடம்!
//நினைவுகளை சுமந்தபடி அவற்றை கிழித்து போட்டதற்கு வருந்தி கொண்டே....//

நடப்பது தான்... நானும் நான் எழுதிய படைப்புகள் சிலவற்றை எறிந்து விட்டேன்.. கொஞ்சம் சரிப்படுத்தி அவற்றை இப்போது பதித்திருக்கலாம் என்று தோன்றும் சில சமயம்.
மோகன்ஜி said...
வெங்கட், இந்தக் கதை நிறைய குப்பைகளின் அல்லவா கிளறிவிட்டு இருக்கிறது?!
மோகன்ஜி said...
நன்றி குமார்!
மோகன்ஜி said...
காத்திருக்கிறேன் ஜீ.வி சார்! வாருங்கள்.
மோகன்ஜி said...
அப்பாதுரை காரு? பாக உன்னாரா?
RVS said...

மோகன் அண்ணா கதை ரூபத்தில் உணர்வுகளோடு விளையாடுவார். பச்ச மொழகா மாதிரி இன்னொரு கதை! எப்படி இப்படியெல்லாம் எழுதணும்னு கதைப் பட்டறை ஒண்ணு நடத்தும்! :-)